The Red Balloon




சிறு வயதில் பலூன்கள் மேல் எனக்கு அளவிடமுடியாத ஆசை இருந்தது.

அதே ஆசை இன்று இருக்கிறதா என்றால் பதில் சொல்லத்தெரியவில்லை
பலூன்களைப்பார்க்கும் போது ஒரு இனம்புரியாத ஆர்வம் ஏற்பட்டாலும் நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்ற எண்ணம் வர அடுத்த நிமிஷம் ஆர்வம் குன்றிப்போய் விடும்
பாலூன்களோடு சேர்த்து எனது சிறு பராயமும் தொலைந்துவிட்டது.
தொலைந்து போன நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்தது ஒரு குறும்படம்
"The Red Balloon"

பள்ளிக்கு செல்லும் ஒரு சிறுவன் மின் கம்பத்தில் சிக்கிகொண்டிருக்கும் ஒரு பலூனை காண்கிறான்
சிவப்பு நிறத்தில் பெரிதாய் இருக்கும் அந்த பலூனை பார்க்க எனக்கே ஆசை வருகிறது என்றால் , அந்த சிறுவனுக்கு ஆசை வராமலா இருக்கும் ?
பலூனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு செல்ல தொடங்குகிறான்.

பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர்.
பலூனை பிரிய மனமில்லாத சிறுவனும் பலூனை எடுத்துக்கொண்டு ஓடத்தொடங்குகின்றான்.
பலூனை பள்ளியின் உள்ளே எடுத்து செல்ல முடியாத காரணத்தால் பள்ளிப்பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு
பள்ளிமுடிந்ததும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வருகிறான்.
வழியில் லேசான மழைத்தூறல்கள் பலூன் நனையக் கூடாதென்று வழியில் நடக்கின்றவர்களின் குடையில் பலூனை நனையாமல் அழைத்து செல்கிறான் சிறுவன். வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாத குழந்தை உள்ளங்களின் செயற்பாடுகளை கவிதையாய் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

வீட்டில் அம்மாவுக்கு பலூனை பிடிக்கவில்லை வெளியில் விட்டுவிடுகிறார்.
அம்மா அகன்றதும் மெல்ல ஜன்னல் வழியாக வந்து சிறுவனை அழைக்கிறது.
சிறுவனும் சந்தோசமாக உள்ளே அழைத்துக்கொள்கிறான்.
மறுநாள் சிறுவன் பள்ளிக்கு செல்ல பின்தொடர்கிறது பலூன்.பிடிக்க நினைத்தால் அகப்பட மறுக்கிறது.போக்குகாட்டி விளையாடத் தொடங்குகிறது .
சிறுவன் ஒரு மூலையில் ஒளிந்துகொள்ள அவனை கண்டுபிடிக்கிறது பலூன்.இருவரும் ஒளிந்து பிடித்து விளையாடுகிறார்கள்.

 சிறுவன் பேருந்தில் ஏறிக்கொள்ளபலூன்  பின் தொடர்கிறது.
எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.பள்ளியில் பலூனை பார்க்கும் மற்ற சிறுவர்கள் பலூனை பிடிக்க முயல அது உயரே பறந்து விடுகிறதுயார் கைக்கும் அகபடாத பலூன் சிறுவன் கைகளுக்குள் மட்டும் சரணடைகிறது.
இதைபார்த்த ஆசிரியர் பலூனை வெளியே வீச நினைத்து பிடிக்க முயல்கிறார்.பலூன் அவர் கைக்கு அகப்பட மறுக்கிறது.கோபம் கொண்ட ஆசிரியர் சிறுவனை ஒரு தனியறையில் வைத்து பூட்டி விடுகிறார் .கோபம் கொண்ட பலூன் ஆசிரியர் போகும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று இம்சிகிறது .வேறு வழியில்லாத ஆசிரியரும் ஒரு கட்டத்தில் சிறுவனை திறந்து விட பலூன் சிறுவனை சந்தோசமாக கூட்டிச்செல்கிறது.
வழியில்ஒரு சிறுமி நீலநிற பலூனோடு செல்கிறாள்உடனே சிவப்பு நிற பலூன் அந்த பலூனை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறதுசிறுவன் தன்னுடைய பலூனை எடுத்துக் கொண்டு செல்ல, உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனை பின் தொடந்து வர சிறுமி ஓடி வந்து தன் பலூனை பெற்று செல்கிறாள்.

மற்ற சிறுவர்களுக்கு பலூனுக்கும் சிறுவனுக்குமான நட்பு பிடிக்கவில்லை.பொறாமையால் தவிக்கிறார்கள்.பலூனை பிடிக்க  முயற்சிகிறார்கள். பலூன் அவர்கள் கையில் சிக்காமல் அலைகழிக்கிறது.ஒரு கட்டத்தில் பலூனை பிடித்து விடுகிறார்கள்சிறுவன் அதை அவர்களிடமிருந்து மீட்டு தப்பித்து ஓடத்தொடங்குகின்றான்.எல்லோரும் சிறுவனையும் பலூனையும் துரத்துகிறார்கள். சிறுவன் மாட்டிக்கொள்கிறான்.எல்லோரும் பலூனை கல்லால் அடிக்கிறார்கள்.பலூன் படுகாயம் அடைகிறது.மனிதருக்கு காயம் ஏற்படுவது போலவே பலூனின் உடலெங்கும் கொப்பளங்கள் உண்டாகி தரையில் விழுந்து தவிக்கிறது.மேலும் காயம் ஏற்பட பலூன் தன் உயிர் மூச்சுக்காற்றை இழந்து இறக்கிறது.
கவலையோடு பலூன் முன்னால் அமர்ந்து அழுகிறான் சிறுவன். அடுத்த நிமிடம் ஊரில் உள்ள அத்தனை பலூன்களும் சிறுவனை நோக்கி வருகின்றன.நூற்றுக்கணக்கான  பலூன்கள் வந்து குவியசிறுவன் அவற்றின்  கயிறுகளை ஒன்றினைக்கிறான்.அத்தனை பலூன்களும் அவனை உயரே தூக்கிக் கொண்டு வானில் பறக்க ஆரம்பிகிறது.


சில வார்தைகளைத்தவிர படத்தில் வசனமே இல்லை .காட்சிகளின் கவித்துவத்துக்கு முன்னால் வசனங்கள் எதற்கு?
என்று ஒரு கவிதையை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் Albert Lamorisse 
 ரெட் பலூன் திரைப்படம் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் நர்சரி பள்ளிகளில் கட்டாய படமாக காட்டப்பட்டு வருகிறது.
குழந்தைகள் சினிமாவாக எதை எதையோ படமாக்குபவர்கள் கொஞ்சம் இந்த படத்தையும் பாருங்கள்
அன்பு என்பது என்ன? மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா...இல்லை உயிர்லாத பொருட்கள் கூட நம்மை அன்பால் ஆட்கொண்டு விடும் .
என்பதை உணர்த்தியிருகிறது இந்தப்படம்.



படத்தை பார்த்த போது சிறுவயது பலூன் ஞாபகங்கள் வந்துகொண்டே இருந்தது .
விதவிதமான பலூன்களை வாங்கி வைத்து அழகு பார்த்த நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன 
திருமண வீடுகளுக்கு விழாக்களுக்கு செல்வது எனக்கு ரொம்பப்பிடிக்கும்.அங்கே கட்டி இருக்கும் பலூன்களில் தான் என் கவனம் இருக்கும் எப்ப அவிழ்த்து தருவாங்க எப்ப விளையாடலாம்னு ஆசையா இருக்கும்
பல சமயம் பலூன் கேட்டு அடம் பிடித்து இருகேன்.
கடற்கரையில் அம்மா வாங்கித்தந்த பலூனை யாருக்கும் தரமாட்டேன் என்று அலுமாரியில் பூட்டி வைத்து விடிந்ததும் எழுந்து பார்த்தால் அது காற்று இறங்கிப் போய் இருந்தது .அன்று அழுதது இன்னும் மறக்கவில்லை
பெரிதாக இருக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக காற்று ஊதி பலூன் வெடிக்க நான் அடைந்த துன்பம் எனக்கு மறக்கவில்லை
பலூன்களில் இருப்பது வெறும் காற்று அல்ல அதுதான் சிறுவர்களின் கனவுகள் எண்ணங்கள் 
வளர்ந்த பின்னர் பலூனோடு சேர்த்து எல்லாம் தொலைந்து விடுகிறது 


Comments

  1. மிக மிக அருமையான ஒரு திரைப்படம் ..... மிக அருமையான விமர்சனப் பதிவு .............. .

    ReplyDelete
  2. உங்கள் பதிவு அந்த திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை தருகிறது உங்கள் எழுத்துக்கு நான் தீவிர ரசிகன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா...நான் எழுதியது படம் தரும் அனுபவத்தில் ஒரு வீதம் தான் ...
      அருமையான படம்
      பார்த்து ரசியுங்கள்
      "ரசிகர் "???

      Delete

Post a Comment

Popular posts from this blog

The Clue:4th Period Mystery