ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....



''உயிரே''  காதல் கதைகள்- பகுதி 1




நான் தேநீர் விரும்பியல்ல.
தேநீர் போலவே எனக்கு காதலும் :)
காதலின் இயல்பும் அதீதமும் அரிதாகவே என்னை கவர்ந்திருகின்றன.
மணிரத்னம் படங்களில் வெளிப்படும் காதலின் அழகியல் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
மணிரத்னம் படங்களில் காதல் என்பது அழகிய சிறுகதைகளின் தொகுப்பு.
வசனங்களில் ....காட்சிப்படுத்தலில் ....
ஒளிப்பதிவில் ....இசையில் ....வரிகளில் என்று
அதன் பிரிவுகள் மட்டுமே மாறிக்கொண்டிருகின்றன.
தில்ஸே(உயிரே )
ஏன் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசுவதில்லை என்ற கேள்வி அடிக்கடி எழும்.
உயிரேயின் அரசியல் தவிர்த்து
அதன் காதல், அழகிய சிறுகதைகள்.
முதல் சிறுகதை
உலகத்திலேயே
மிகவும் சுருக்கமான காதல் கதை இது தான் என்று முடிகிறது.
நான் ஆரம்பிக்கிறேன் :)
மணிரத்னம் படங்களில் காதல் களங்கள் எவை ?
ரயில்,மழை,காற்று,பரவசம், புன்னகை
எல்லாம் இங்கிருக்கிறது.
அமர் ஒரு சாதாரண இளைஞன்.
எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும்
தீர்வுகளை பற்றி சிந்திக்காதவன்.
எப்போதும் மகிழ்ச்சியும் தேடலும் ஆர்வமும் கொண்ட இளைஞனின் முகம்
அன்றைய ஷாருக்கினுடையது.
அசட்டை நடிப்பு என்ற விமர்சனங்களை தாண்டி ஏனோ
ஷாருக்கின் கண்களின் குறுகுறுப்புக்கும்
 வர்த்தக அடையாளத்துக்கும் நிகராக
யாரும் நினைவுக்கு வர முடியாத நிலையில்
நிச்சயம் அன்று மணிரத்னம் இருந்திருப்பார்.
அவன் பயணம் ஆரம்பிகிறது.
இந்தியாவின் எல்லைக்கோடுகள்
மக்களின் வாழ்வியலுக்கும்தான்.
தன் இருப்பிடத்தில் இருந்து செய்திகள் மூலமாகவே கண்டறிந்த ஒரு வாழ்வியலை காண
பார்வையாளனாக செல்லும் அவனின் துடிப்போடு காட்சி ஆரம்பிகிறது.
இரவு நேர ரயில் நிலையம்
மழையை அறிவிக்கும் கடும் காற்று
உள்உடல் குத்தும் குளிர்நிலை
குளிரை கட்டுப்படுத்த சிகரெட் இருந்தாலும்
நெருப்பில்லா நிலை
அதே ரயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுகளோடு
கறுப்புதுணி போர்த்திய உருவத்திடம் சத்தமிட்டு கேட்கிறான்.
குளிரின் தீவிரத்தை போக்க தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறான்.
திடிரென்று காற்று, அவள் போர்வையை இழுத்துச்சென்று
அவளை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது.
அவளை பார்த்ததும்
உணர்கிறான்
நான்
அவள் வசம் !
பரவசம் !
இந்த பரவசம் என்பது எப்படி இருக்கும் என்பதை
இந்த காட்சியில் ஷாருக்கின் பழுப்பு கண்களில் காணலாம்
 அத்தனை இயல்பு
மனசும் புத்தியும் சேர்ந்து செயற்படும் தருணம் அது.
கொஞ்சம் பித்து நிலைதான்.
பேச முயற்சிக்கிறான்.
பதில் மௌனம்.
மீண்டும் பேசுகிறான் .
அவள் பார்க்கிறாள் .
இப்போது அவனுக்கு சந்தோசம் .
அருகில் அமர்ந்து பேச ஆரம்பிக்கிறான் .
அவளிடம் மெல்லிய புன்னகை அரும்புகிறது .
அவன் கேட்ட நெருப்பை விட
அந்த புன்னகை அவனுள்
அதிக கதகதப்பை ஏற்படுத்துகிறது.
அவளுக்கு ஏதோ ஒன்றை கொடுக்க வேண்டும் என்று
தோன்றுகிறது.
நமக்கு பிடித்தவருக்கு
ஏதோ ஒன்றை கொடுக்க வேண்டும் என்று
விரும்பும் அந்த மனதின் துள்ளல்
அவனை துண்டாடுகிறது.
என்ன வேண்டும் என்ற நச்சரிப்பில்
அவள் கேட்கிறாள்
''ஒரு கோப்பை தேநீர் வேண்டும்''
அவள் பேசிவிட்டாள் என்ற ஆச்சர்யம் ஒருபுறம்.
கேட்டதை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மறுபுறம்.
பரவசத்தில் தடுமாற்றம்.
குளிருக்கு அஞ்சியவன்
மழையில் கடை தேடி ஓடுகிறான் .
அவளோடு ஒரு பொழுது தேநீர் அருந்த வேண்டும்
என்ற ஆசையில்
பரபரக்கிறான்.
சந்தோஷத்தில் இருப்பவனை திசை திருப்புகிறது
அந்த ரயிலோசை .
தேநீரோடு நிற்பவனை கடந்து
ரயிலில் செல்கிறாள் அவள்.
சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்த முயல
பார்வையால் கடந்து சென்றுவிடுகிறாள்.
அசட்டுப்புன்னகையுடன்
அவள் தந்த பரவசத்தில்
உலகத்திலேயே மிகவும்
சுருக்கமான காதல் கதை இதுதான் என்று
சிரித்துக் கொண்டே அவன் நிற்க,
கையில் இருக்கும் தேநீரில்
மழைத்துளிகள் கலக்கிறது.
அவளுக்கு அவன் எப்படியிருந்தான் ?
இந்த இரவில்
தனிமையில்
குத்தும் குளிரில்
சிறுபிள்ளைதனமாக பேசிக்கொண்டேயிருக்கும்
ஒருவன் எப்படி தோன்றியிருப்பான்?
அவள் நிலையில்
அவனை வெறுக்க முடியாதளவு
வெறுமை நிலையை அடைந்துவிட்டாள்.
அதை அவன் புரிந்துகொண்டிருந்தால்
சுருக்கமான கதையாக முடிந்துபோயிருக்கும்.
உயிரேயின் அடுத்த சிறுகதையை தொடர வாய்ப்பிருந்திருக்காது.
காதல் சிந்திப்புக்கு எங்கே இடமளிக்கப்போகிறது ?
//ஒரு பார்வையிலே என்னை உறையவைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருகவைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்
உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்
நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
என்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ....//
மணிரத்னம் படங்களில் பிரதேச பயணங்களின் முக்கியத்துவம் இருக்கும்.
உயிரே அதிகமான பிரதேசங்களை கொண்ட திரைக்கதை.
பயணங்கள் அதிகம் கொண்ட இந்த திரைக்கதையை
இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி மீள் இயக்கினால்
நிச்சயம் மறக்க முடியா படைப்பாகிவிடும்.
வேறுபட்ட இந்திய வாழ்வியலை கொண்ட இருவரின் அந்த பயணம்
மிக முக்கியமான கட்டம்
நாவலாக எழுதலாம்;எழுதவேண்டும்.
முதலும் முடிவுமாய்
அவனும் அவளும்
பயணிக்க தொடங்கும்
உயிரேயின் அடுத்த சிறுகதை பற்றி
மேலும் பேசுவோம் ......



Comments

Post a Comment

Popular posts from this blog

Dyketactics