Paths of the Soul - ஆன்மாவின் யாத்திரை



ஆன்மிகம் என்பது உள்ளார்ந்த ரீதியாக உணரப்படும் அமைதிநிலை. சிலை வழிபாடுகள், சடங்குகள், மத போதைனைகள் என்பன ஆன்மிகம் அல்ல. மதங்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி இயங்குகையில் ஆன்மிக அனுபவம் நிகழ்வதில்லை. நம் எண்ணங்களினால் செயல்களில் வெளிப்படும் அமைதியே நமக்குள் நிலவும் ஆன்மிகத்தை புலப்படுத்தும். அத்தகைய ஆன்மிக யாத்திரையில் உணர்த்தப்படும் நம்பிக்கை ஒளியை திரையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் தான் Paths of the Soul.

திபெத் நாட்டின் சிறியதொரு கிராமத்தை சேர்ந்த சிலர், தலைநகரிலுள்ள Lhasaவுக்கு, 1,200 மைல்கள் தரையில் வீழ்ந்து வணங்கியபடியே நடைபயணமாக மேற்கொள்ளும் ஆன்மிக யாத்திரையூடாக, அவர்களது அன்பு, பொறுமை, அமைதி, வாழ்வியல் அணுகுமுறை என்பவற்றில் வெளிப்படுத்தப்படும் ஆன்மிக உணர்வுவை இந்த ஆவணப்படம் பதிவுசெய்கின்றது.

இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட தேவையும் காரணமும் இருக்கின்றது. குடும்பத்தின் தீவினைகள் நீங்க, விலங்குகளை கொன்ற பாவம் தீர்க்க, வாழ்வில் இறுதி அமைதியை நோக்கி என்று பல எண்ணப்பாடுகளுடன் ஒன்றாக பயணிக்கும் இவர்களது பலவருட பயணத்தின் வழியாக வாழ்க்கையின் உள்ளொளி புலப்படுத்தப்பட்டு படம் பார்க்கும் நமக்கு ஒரு அற்புதமான ஆன்மிக அனுபவம் ஏற்படுகின்றது.

இவர்களின் ஆன்மிக யாத்திரை வெறும் நடைப்பயணமாக இல்லாது, இரண்டு அடிகள் எடுத்துவைத்து அஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி, மீண்டும் எழுந்து இரண்டு அடிகள் நடந்து தரையில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். இவ்வாறு 1,200 மைல் தூரத்தை பல வருடமாக பனி, வெயில் பார்க்காது கடப்பது சாதாரண செயல் அல்ல. அளவில்லா பொறுமை வேண்டும். பயணத்தில் பல தடைகள் வருகின்றன, பாதைகள் சீரற்று இருத்தல், பிற வாகனங்களினால் தாமதம் ஏற்படுதல் என்று எத்தனையோ தடைகள் வந்தாலும் அவற்றை பற்றி கவலைப்படாமல் யாத்திரையை தொடர்ந்து செல்கின்றனர். பயணிகளில் ஒரு பெண் கர்ப்பிணியாக பயணத்தை ஆரம்பித்து, பயணத்தின் நடுவே குழந்தை பிறந்து குழந்தை வளர்ந்த பின்னர்தான் அவர்களது பயணம் பூர்த்தியடைகின்றது. இலக்கின் மீதான நம்பிக்கையும் தன்னலமற்ற அன்பும் உள்ளார்ந்த அமைதியும் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆவணப்படத்தில் உணர்ந்துகொண்டேன்.

திபெத் நாட்டின் நில அழகியல் இங்கு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருகின்றது. நவீனங்கள் தீண்டாத இயற்கை அம்சங்களை, மாபெரும் மலைகளை, அழகிய வீதிகளை காட்சிப் பின்னணியில் பார்க்கையில், இந்த நில அமைப்பின் அமைதியும் எளிமையும் திபெத்திய மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கின்றது எனத்தோன்றியது.

இயக்குனர் Zhang Yang தனது கல்லூரி காலத்தில் திபெத்திற்கு மேற்கொண்ட பயணத்தினால், அந்த  அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு சில வருடங்கள் கழித்து இந்த ஆன்மிக பயணத்தை Road Documentaryஆக உருவாக்கியிருக்கின்றார். திபெத் நாட்டை சீனா கைப்பற்றிய பின்னர் திபெத்திய மக்களின் கலை கலாசார வாழ்வியல் முறைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு முழுக்க முழுக்க சீன மக்களின் வாழ்வியல் முறையை திபெத் மக்களின் வாழ்வியலாகவும் காட்டுவதன் மூலம் அவர்களது அடையாளங்களை சிதைத்து வருகின்றது. சீன இயக்குனரான Zhang yang,  இந்த ஆவணப்படத்தில் திபெத்தின் அரசியல் சூழலை பற்றி நேரடியாக பேசவில்லை என்றாலும் படத்தின் தலைப்பினை திபெத்திய மொழியில் சூட்டியதோடு திபெத்திய மக்களின் வாழ்வியல் முறைகளை, ஆன்மிக நம்பிக்கைகளை, நிலஅமைப்பினை முழுமையாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்து அவர்களின் வாழ்க்கையை உலகத்திற்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்.  

ஆன்மிகம் என்பது உணரப்படும் நபர்களிலிருந்து பிறருக்கு உணர்த்தப்படக்கூடும் என்பார்கள். அதற்கேற்ப Paths of the Soul, நிஜத்தில் இந்த மனிதர்கள் கண்டடைந்த ஆன்மிகத்தின் வழியாக அமைதியை நமக்குள் உணர்த்துகின்றது. 


* 2018 ஆகஸ்ட்  மாத ''புது விதி'' வார இதழுக்காக எழுதிய கட்டுரை

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery