Oscar Women




இந்த வருடம் Oscar விருதுப்பரிந்துரைப்பில் இடம்பெற்றுள்ள பெண் கலைஞர்களின் தெரிவு தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை இல்லாதளவு இந்த ஆண்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம் . நடிகை, துணைநடிகை என்ற பிரிவுகளை தாண்டி திரைக்கு பின்னரான பெண் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. ஒரே ஆண்டில் இத்தனை பரிந்துரைப்புக்கள் ஏன்?
#MeToo சர்ச்சை உருவானதால் கட்டாயத்தின் பெயரில் பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கட்டுள்ளதா என்ற ரீதியில் கருத்துகள் எழுந்துள்ளன. இதனை நாம் மறுக்க முடியாது என்பதைப்போலவே முற்றிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்றே நான் கருதுகின்றேன்.


நிறவெறி, ஆதிக்க மனநிலை நிறைந்த திரைப்படத் துறையாக திகழும் ஹாலிவுட்டில் பாலின வேறுபாட்டுக்கும் பஞ்சமில்லை எனலாம். திரைப்படங்களை பொறுத்தவரை Male Gazeக்கு உட்பட்ட படங்கள் ஹாலிவுட்டில் அதிகம். Male Gazeக்கு எதிராக பெண்கள் போராட வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக எழுத்திலும் கருத்திலும் எதிர்ப்பு குரலை பதிவு செய்த பின்னரே மாற்றம் நிகழ்ந்தது. இன்று கூட அதன் தாக்கம் குறைந்திருகின்றதே தவிர முற்றாக அகலவில்லை. திரையில் இத்தகைய நிலை என்றால் திரைக்கு பின்னால் அதனை விட அதிகமான அடக்குமுறை சூழலே காணப்பட்டது. தொழில்நுட்ப கலைஞர்களில் 1/4 பங்கினரே பெண்கள்; அவர்களுக்கும் கடுமையான உழைப்பையும் மீறி தங்களை நிரூபிக்கவும் வெளிப்படுத்தவும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையே காணப்பட்டது. மிக முக்கியமாக ஆண் பெண் சமநிலையற்ற ஊதியக் கொடுப்பனவு பிரதான பிரச்சினையாக இருந்தது.

இத்தகைய அரசியல் அடக்குமுறைகள் நிறைந்த ஹாலிவுட் திரையுலகம் பெண்களுக்கு இந்தமுறை முக்கியத்துவம் அளித்திருப்பது எதிர்பாரா விடயம். Oscar வரலாற்றில் சிறந்த இயக்குனராக ஒரு பெண் வெளிப்பட 82 ஆண்டுகள் எடுத்த போது ( Kathryn Bigelow- The Hurt Locker ) ஒரே ஆண்டில் இத்தனை பேர் தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன? #MeToo தான் இதற்கான பதில். Oscar-இன் அரசியலில் இதுவும் ஒன்று. நாங்கள் பெண்களுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை மறைமுகமாக கூறி #MeToo சர்ச்சையை திசை திருப்ப வைக்கும் முயற்சியே என்பது Oscar மீதான குற்றசாட்டு.


இந்த காரணத்தை கூறி பட்டியலில் உள்ள பெண்களின் உழைப்பையும் திறமையையும் புறக்கணிக்க முடியாது.

இயக்குனர் Darren Aronofsky ‘’ஹாலிவுட் என்பது வெள்ளை ஆண்களின் உலகம்’’ என்று கூறியிருந்தார். இதுவே நிதர்சனம்.

திறமை, உழைப்பு கொண்ட மனிதர்கள் தங்கள் வழியில் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள் ஏதோ ஒரு தருணத்தில் அவர்கள் மீது கவனம் ஏற்படுத்தப்பட்டு / ஏற்பட்டு பேசப்படுகின்றனர். அது நல்ல விமர்சனமாகவோ எதிர்மறை விமர்சனமாகவோ இருக்கலாம். அதற்கு அவர்கள் உரித்துடையவர்களா என்பதும் அதனை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதுமே இங்கு கவனிக்க வேண்டியவை.

விருதினையும் கவன ஈர்ப்பையும் மையப்படுத்தி படைப்பாளிகள் இயங்க ஆரம்பித்தால் அவர்களது படைப்பின் ஆன்மா அர்த்தமற்று போய்விடும்.


புகழ் வெளிச்சத்தை எதிர்பார்க்காது இயங்கியவர்களில் முக்கியமானவர் அக்னஸ் வர்தா. இந்த பட்டியலில் மிக மூத்த படைப்பாளி. “The mother & grandmother of French new wave” என்று அழைக்கப்படும் அக்னஸ் Left Bank-ஐ சேர்ந்தவர். New Wave கூட்டத்தில் மாற்றங்களை விரும்பி செயற்பட்ட ஆண்களிடத்தில் தனிமைப்பட்டுப் போனவர், அக்கால பெண்ணிய இயக்குனர் வட்டத்தின் அடையாளத்தை ஏற்காமல் பணியாற்றியவர்; கருத்துகளை வலிந்து திணிக்காது தன் ஆன்மாவிலிருந்து மனிதர்களை உருவாக்கி படைப்புகளில் தந்தவர். ஏன் இத்தனை நாள் அக்னஸ் புறக்கணிப்பட்டார், என்றோ வழங்கப்பட்டிருக்க வேண்டிய விருது இத்தனை தாமதாய் தற்போது வழங்கப்படுவதன் காரணம் என்ன என்ற கேள்விக்கு அக்னஸ், “நான் படமெடுக்கும் போது இதுபோன்ற விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செயற்படவில்லை, இந்த விருதினால் பெருமையாக உணரவில்லை வழக்கம்போல மகிழ்ச்சியை மட்டுமே உணருகிறேன்” என்று மிக எளிமையாக பதில் கூறிவிட்டார்.


விருதுகள் என்ற அடையாளம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பெருமையை சுமந்து பயணிக்க இவர்கள் தயாரில்லை. சுமைகளுடன் பயணம் இலகுவாக இருக்காது என்பதை நம்பும் மனிதர்களே தங்கள் தேடலில் ஜெயிக்கின்றனர்.


உலகம் முழுவதும் திரைத்துறையில் இயங்கும் பெண்கள் தங்களை பெண்கள் என்ற வட்டத்தினுள் வைத்து அடையாளப்படுத்த விரும்பவில்லை. படைப்பாளிகள், திரைக் கலைஞர்கள் என்ற பொது அடையாளத்துடன் தங்கள் வேலையை செய்கின்றனர். தங்களை பிறர் கவனிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களது செயற்பாடுகள் அமைவதாக தெரியவில்லை. சினிமா என்பது அவர்களது தேடலாகவும் வேலையாகவுமே இருக்கின்றது. இந்த சர்ச்சை பற்றி Oscar வரலாற்றில் முதல் பெண் ஒளிப்பதிவாளராக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள Rachel Morrison இடம் கருத்து கேட்டபோது, ‘’நான் ஒளிப்பதிவாளர். Woman DOP என்று ஒரு பிரிவு இருப்பதாக தெரியவில்லை என்னை DOP என்று அழையுங்கள். பெண்கள் என்ற பிரிவினை கேள்விகள் அவசியமில்லை’’ என்று கூறிவிட்டார்.


#MeToo சர்ச்சையை விட அளவுக்கு அதிகமான பிரச்சனைகளை இந்தப் படைப்பாளிகள் தங்கள் வாழ்வில் சந்தித்திருக்க கூடும். இவர்கள் யாரும் தங்களது வலிகளை அழுது காட்டி கவனம் பெற முயல்வதில்லை. இதுவரை அவர்களுக்கு கிட்டாத ஏதோ ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே இந்த சர்ச்சையால் ஏற்பட்டுள்ளதே தவிர அவர்களது படைப்புகளையும் அவர்களையும் நாம் நிராகரிக்க முடியாது. கேள்விக்குட்படுத்தவும் முடியாது. அப்படி செய்தால் அதுவும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையாகவே அமையும். ஆக, இந்த சர்ச்சைகளை புறக்கணித்து விட்டு பெண்கள் என்ற பாலின அடையாளத்தை தாண்டி படைப்புகளையும் படைப்பாளிகளையும் மட்டுமே கவனத்திற்கொண்டு இன்றைய ஆஸ்கார் விருது விழாவை பார்க்க வேண்டும்.

#Oscar_2018 #Women #women_cinema

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery