கனாப் பொழுதில்...






மனித சுவாசம் போல கனவு தேசம்
கருவறை காரிருள் நீர்த்து பிறக்கையிலேயே
கனவுகள் கவ்விக் கொள்கின்றன.
வாழ்வின் சுவை அறிய செய்யும்
விதவிதமான கனவுகள்
நாம் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் கனவுகள்
எமக்கு மட்டும் சொந்தமில்லை ....
யாருமேயின்றி அனாதையாக நகரும்
பொழுதுகள்
கானாப் பொழுதில்....


விழிகள் மூடினாலும் திறந்தாலும்
இருள் சூழ்ந்த அறை உலகின்
தரிசனங்கள் நித்தமும்
சிறைவைக்கப்பட்ட சிதைந்து போன கனவுகளுடன்
காலம் கடத்துபவர்களின் நிலையை யாரறிவார்
எல்லோருக்கும் கனாப் பொழுதுகள்
எங்களுக்கு பொழுதுகளே கனாவாய் ....



கனப்பொழுதில் கடக்கிறது பேருந்து ...
சிறைசாலை வழியே
போகும்போதும் வரும்போதும் தெரியும்
நீளவாக்கில் உயரமான சுவரால் ஆன கட்டிடம்
திரும்பிப்பார்க்காமல் போகமுடியாது
அந்த சிறைமதில்களை
காரணம்
அந்த மதில்கள் சுமந்திருக்கும் கனவுகள்
ஒவ்வொரு கைதியினதும் கனவுகள்



நீங்கள் என்ன உணர்வீர்கள்
கடந்துசெல்லும் வழியில்
சிறைச்சாலை இருந்தால்.....


எப்பொழுதும் கடந்து விடுகிறோம் நாம்
அதை வெறும் கட்டிடமாக நினைத்து -ஆனால்
அந்த கட்டிடத்திற்குள்
எத்தனை விதமான குற்றவாளிகள்
எத்தனை விதமான உணர்வுகள்
மனிதர்களின் கனவுகள்



நீதி வழங்கும் மன்றத்தில்
குற்றப்பத்திரிகையைதிறந்தால்
அந்த தாள்களில் எங்கள் முகங்கள்
ஒத்திவைப்புக்கும் எதிர்வாதங்களுக்கும்
இடையில் உருண்ட மனிதத்தலைகள்
வாய்தாவுக்கும் வாதங்களுக்கும் இடையில்
உறைந்த இதயங்கள்
வாக்குமூலங்களில்
சிதைந்து போன கனவுகள்
இந்த மதில்களுக்கு பின்னால் தானே
மௌனித்து இருக்கின்றன



அகண்ட மைதானத்தின் ஒரு பக்கத்திலே
கொடுமையானவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட
எங்களுக்காய் மிகக் குறுகலான அறைகள்
காற்று வெளியேற தடுமாறும் நேரத்தில்
கனவுகளும் தடுமாறி தடம் மாறும்
இரண்டரை அடிக் கதவுகள் பூட்டப்பட்ட சிறை
பேய் வீடுகளை போலவே
மற்றவர்களுக்கு

 


உங்கள் ஏகாதிபத்தியத்தின் தலைமைக்கு
நசுக்கப்பட்ட எங்கள் வாழ்க்கையே
மனித உரிமையின் சாட்சி
உள்ளக் கசப்புகள் நீக்க உடல் அலுப்பு போக்க
எங்கள் உடல்கள் வழிகோலுகின்றன
தட்டாம்பூச்சி பிடித்து சுருக்கிட்டு கொல்லும்
சிறுவயது வன்மம் நிறைந்த உள்ளம்
மிருகத்தில் இருந்து வந்த வழித் தோன்றல்கள்
என காட்டும் வேகம்
சக மனித வதையில் தோன்றும்
போதை தரும்இன்பம்
சிறை கொண்ட சித்திரவதைகள் எத்தனை எத்தனை
எல்லாம் சுமந்திருக்கின்றன சிறைசுவர்கள்


இருட்டு சிறைகளில் நடக்கும் கொடுமைகள்
நாம் உயிருடன் வெளியேறினால் அன்றி ....
???
இருட்டுக்குள் இருட்டாய் மறைந்து போகும்



விடை தெரியாத வினாவுக்கு முன்னால்
விடைக்காய் காத்திருக்கும் மாணவனைப்போல
வாசலில் காத்திருக்கும் உறவுப்பாலங்கள்
சந்திக்க நேர்கையில்
சட்டமிடப்பட்ட கம்பிவலைக்கு இருபுறமும்
கூட்டம் கூட்டமாய்
அடையாளம் தேடிடும் முகங்கள்
தேடித் தீர்த்த விழிகள் சந்திக்க
வார்த்தைகள் குவியல் குவியலாய் முட்டிமோதி
யாருக்கு யார் சொன்னது என்று உணரமுடியா நொடிகள்
தடுப்பு சுவர்கள்
மனிதர்களுக்கா இல்லை மனிதத்துக்கா?


சிலநூறு பேர்கள் மட்டும் இருக்க கூடிய அறைகளில்
சில ஆயிரம் பேர்கள் அடைக்கப்படுகையில்
எல்லாமே மாறிப்போகின்றன
மனநிலை முதல் மனிதம் வரை


இலக்கமிடப்பட்ட வெள்ளை நிழல்களாய் நாங்கள்
சிறையில் அடைக்கப் பட்டது ஏன்
சந்தர்ப்ப சூழ்நிலையா
சத்தியம் தவறியதா
சலனமா சபலமா
இல்லை சதியா


மொத்தமாக சொல்லிவிடுகின்றீர்கள்
யாவரும் குற்றவாளிகள் என்று
நாங்கள் யாரோ ஒருவருக்கு
அன்பான அப்பாவாக
பாசமுள்ள தாயாக
அண்ணனாக நண்பனாக
வாழ்கிறோம் என்பதை அறிவீர்களா


ஈவு இரக்கமற்ற கொலை வெறியன்
அணில் பிள்ளைக்கு பாலூட்டும் பரிவு பார்த்து
வியக்கிறது நெஞ்சம்
எத்தனை சிக்கல் மிக்கது மனித உள்ளம்


ஒருவேளை
அந்த மதில்களில் காது கொடுத்து கேட்டுப் பார்த்தால்
ஒலித்திடுமோ எங்கள் இதயத் துடிப்புகள்


சிறை என்றாலே சட்டென்று தோன்றும் ஒதுக்கம்
எமக்காய் கனாப் பொழுதுகளை
உள் நோக்கிப் பார்க்கவா போகிறது ?
செல்லக் கூடாத இடங்களின் பட்டியலில்
முதல் இடத்தில் சிறை
நெருங்க கூடாதவர்களாய் நாங்கள்


சிறைக்கு சிறை
கைதிகள் மாற்றப்படுகையில்
மாற்றப்படுகின்றன
எங்களின் கனவுகளும் சேர்த்து


வரலாறுகள் சொல்லும்
சுகந்திரப் போர்கள்
உரிமை மீட்புகள்
தனிமனித சுயங்கள்
வெகுஜனபோராட்டங்கள்
சகல பதிவுகளையும் சாட்சியாய்
சுமந்திருக்கும் சிறைகள்
மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட
பிரிவினரின்
சிறைப்பிடிக்கப்பட்ட
கனவுகளையும் சுமந்திருக்கிறது என்பதை யார் அறிவார் ?



சட்டப்படி தண்டனை கொடுக்கும் கடமையாலர்களுக்கு
புரிவதில்லை
எங்கள் ஒருசாண் வயிற்றின் வறுமை புலம்பல்கள்
என்றாவது கேட்டதுண்டா உங்கள் சட்டம்
எம்மைப்பார்த்து பசிக்கிறதா என்று?


வாழ்க்கை ஓட்டதிற்காய் குற்றவாளியக்கப்பட்டவர்கள்
நாங்கள்
எங்களுக்கும் கனவுண்டு அதில் வாழ்க்கையுண்டு
என்று யார் அறிவார் ?
என்ன செய்ய
ஆன்மாவை மறந்துவிட்டு சடலங்களை கொண்டாடும்
மனிதர்கள் தானே நீங்கள்.


குற்றவாளிகள்
தண்டனைகள்
குற்றங்கள் நிரம்பிய இடம்
இதுவே உங்கள் அதிக பட்ச புரிதல்
சிறைக்குள்ளும் ஒரு உலகம்
கனவுகள் நிரம்பிய உலகம்
இருக்கிறது
சிறைப்படுத்தப் பட்ட கனவுகள்
விரக்கதியின் விளிம்பில் விழிகளில் கனவுகள் வலிக்கிறது
ஒரு சராசரி வாழ்க்கை அதுவே உச்ச பட்ச கனவு


உங்களைப்போல ரத்தமும் சதையும் கொண்டவர்கள்
கனவுகளும் ஆசைகளும் நிரம்பியவர்கள்
என்பதை என்று உணரப்போகிறிர்கள்?


காலம் கசக்கி துப்பிய எச்சங்களாய் நாங்கள்
எதுவும் வேண்டாம் எங்களுக்கு
உங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளுங்கள்
அதுவே எம் பொழுதுகளின் உச்சபட்ச கனவு


இது வரை உலகில்
எத்தனை கண்டுபிடிப்புகள்
எத்தனை ஆராய்சிகள்
நோய்களை குணப்படுத்த
ஆனால் இன்றுவரை
மருந்தில்லை
விளிம்புநிலை மனிதர்களின்
குற்றங்களை குணப்படுத்த


எல்லோருக்கும் கனாப் பொழுதுகள்
எங்களுக்கு பொழுதுகளே கனாவாய் ....


Comments

  1. முதல் மௌனத்தின் மொழிபெயர்ப்பு..touching full sentences bavi..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சட்டென நனைந்தது நெஞ்சம்

Departures

The Clue:4th Period Mystery