அநாதைக்கருவாளிகள்!
ஒற்றைக்கனவில் ஊடாடும்
வாழ்க்கை
துறவுக்கும் துணைக்கும் இடையில்
இயைவு தேடி நகரும்.
வெளிச்சத்திரையில்
கண்ணீர் கசியும் நொடிகளுக்காக
போலிப்புன்னகை சுமந்து
என்று இடம்பெயரும் ?
வலிக்க வலிக்க
செதுக்கிச்செதுக்கி செய்யும் தவம்
உனதல்ல எனவும்
அது
எளிதல்ல எனவும் பறை .
இக்கனா
தேயம் அழிக்கும் தேயு.
கனவின் தேளை தொடர
என் தார்ட்டியம் அறியா
உலகம்
சிரிக்கும் ...பழிக்கும்.
என் துருவம் மரியா
துல்லம் எதிரொலிக்கும்
என்றென்றும்.
கனவின் நீட்சி
எனை அழிக்கும்
எனை மீள் உயிர்க்கும்.
தனை கரைத்து கலை புரியும்
மகவுகளை சுவிகரிக்க யாருண்டு ?
ஆனாலும்
வாழ்வுண்டு.
அநாதைக்கருவாளிகள்
உயிர்க்கும் கருப்பைகள்
இருப்பறியா இன்மையாய்
துடிதுடித்தே உயிர்க்கும் .
இறப்புக்கும் உயிர்ப்புக்குமான
துலாபார நாட்கள்
அது தீர்மானிக்கும்
வாழ்நர் நாமங்கள்.
வாழ்வின் தாழ்
திறக்கும் வரை
தொடரும்
இந்த
ஒற்றைக்கனவில் ஊடாடும்
வாழ்க்கை.!
Comments
Post a Comment