SE7EN




திங்கட்கிழமை காலை ...மழை பெய்து கொண்டிருகிறது .
பழைய கட்டிடத்தை நோக்கி செல்கிறார்கள்
துப்பறிவாளர்களான வில்லியம் சொமர்செட்டும் டேவிட் மில்லரும் .

மிகவும் அழுக்கடைந்த அறை ....இருட்டு ....ஒரு மாமிசமலை போன்ற பருமனான மனிதன், வயிறு வெடித்து இறந்து கிடக்கின்றான் .
அவனது கால்களும் கைகளும் முட்கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது .
அளவுக்கதிகமாக அவனை சாப்பிடச்செய்து கொடூரமாக கொலை செய்திருகிறார்கள்  என்று தெரிகிறது .

அடுத்த நாள் -
நகரத்தின் மிக பிரபலமான வக்கீல் ....தனது உடற்பகுதியை தானே வெட்டி எடைபோட கொடுத்திருக்கிறார் ,மேசைக்கடியில் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த நிலையில் அவரது உடல் கிடைக்கிறது .
தரையில் 'GREED' (பேராசை ) என்று இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது .

முன்னர் நடந்த கொலையில் GLUTTONY (பெரும்தீனி)  என்று எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது .

இந்த வாரத்தைகள் பைபிளில் காணப்படுகின்றன .
PRIDE (பெருமை )
ENVY (பொறாமை  )
GLUTTONY(பெரும்தீனி)
LUST( இச்சை )
WARTH (பெரும்கொபம் )
GREED(பேராசை )
SLOTH(சோம்பேறித்தனம்)            7 பாவங்கள் இவை
இந்த பாவங்களை செய்தவர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள் .
இன்னும் 5 கொலைகள் நடக்கப் போவதாக கூறுகிறார் வில்லியம் .

வில்லியம் சோமர்செட் இந்த துறையில் மிகவும் அனுபவசாலி .எப்போதும் நிதானமாக சிந்தித்து செயல்படுபவர் .
அவருக்கு இது இறுதி வழக்கு .இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற போகிறார் என்பதால்  இந்த வழக்கு தனக்கு வேண்டாம் என்று மறுக்கிறார்  .
அத்தோடு டேவிட் மில்லர் . சோமர்செட்க்கு முற்றிலும் மாறுபட்டவன்.
எப்போதும் வேகமாக முடிவெடுப்பவன் .கொஞ்சம் கோபக்காரன் . இருவருக்கும் அபிப்ராய வேறுபாடுகள் இருப்பதால் பணியாற்ற மறுக்கிறார் .
ஆனால் மேலதிகாரி இருவரையும் சேர்ந்து பணியாற்றும்படி கேட்கவே கொலையாளி யார் என்பதை தேடும் படலம் ஆரம்பிகிறது .


வக்கீலை கொலை செய்த இடத்தில் .ஓவியத்திற்கு பின்புறம் HELP ME என்று எழுதப்பட்ட  நிலையில் கை ரேகை கிடைகிறது அதை ஆய்வு செய்கையில் விக்டர் என்ற குற்றவாளியின் ரேகை அது என்று தெரிய
அங்கு சென்றால் அவன் அபாயகரமான நிலையில் இருக்கிறான் .

1 வருடத்திற்கு மேலாக கட்டிலில் கட்டி வைக்கப்பட்ட நிலையில்
நாக்கை அறுத்து ,ஒரு கையை வெட்டி எடுத்து,  சிறுநீர் வழியை அடைத்து என்று இன்னும் பல சித்திரவதைகள் ....
அவனுக்கு உயிர் இருக்கிறது ....மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் அவன் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டான் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் . சுவற்றில் SLOTH(சோம்பேறித்தனம்) என்று எழுதப்பட்டிருகிறது .தினமும் அவன் உடல் சிதிலமடைவதை புகைப்படம் எடுத்து ரசித்திருகிறான் கொலைகாரன்  .

எப்படி இவனை கண்டு பிடிப்பது என்று இருவரும் யோசிக்கையில் பாவங்கள் பற்றிய புத்தகங்களையும் அதை படித்தவர்களையும் தேடுகிறார்கள் .
FBI ,நூலகங்களில் எடுக்கும் தரவுகளை ரகசியமாக  பெற்று அதனடிப்படையில் ஜான் டோ என்பவனின் வீட்டுக்கு செல்கிறார்கள்.
அங்கு ஜான் டோ இவர்களை சுட்டு விட்டு தப்பிக்க முயல, மில்லர் அவனை துரத்துகிறான் .நீண்ட துரத்தலில் அடிபட்டு விழும் மில்லரை  கொல்ல முயன்றும் தவிர்த்துவிட்டு ,தப்பிக்கிறான் ஜான் .

அவனது வீட்டை உடைத்து சோதித்தால் கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் விக்டரின் கை உட்பட பல பொருட்கள் கிடைக்கின்றன . அத்தோடு நிறைய புத்தகங்கள், அவன் கைப்பட எழுதிய தகவல்கள் அடுத்து கொல்ல  போகும் நபர்கள் என்று கிடைக்க, தேடி செல்கிறார்கள்
அதற்குள் விலைமாது ஒருத்தி கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள் .LUST( இச்சை )என்று எழுதப்பட்டிருகிறது
அடுத்தநாள் பிரபல மாடல் அழகி கொடூரமாக மூக்கறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள் .PRIDE (பெருமை )என்று எழுதப்பட்டிருகிறது .

எப்படி அவனை தேடுவது என்று குழம்பி திரிகையில் திடிரென்று ஜான் இரத்தம் தோய்ந்த நிலையில் சரணடைகிறான் .
இன்னும் 2 பிணங்கள் இருப்பதாகவும் மில்லரும் வில்லியமும் மட்டும் தனித்து வந்தால் காண்பிக்க முடியும் என்றும் இல்லாவிட்டால் தனக்கு மனநிலை சரி இல்லை என்று கூறி நீதி மன்றத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று மிரட்டுகிறான் .
இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் வீணாக கூடாது என்று வர சம்மதிகின்றார்கள் இருவரும் . 

நீண்ட தூரப் பயணத்திற்கு பின்னர் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த சொல்கிறான் ஜான் .மூவரும் இறங்குகிறார்கள்
தூரத்தில் ஒரு வண்டி வருகிறது.அதை தடுத்து நிறுத்த செல்கிறார் வில்லியம்.
மில்லர் துப்பாக்கியுடன் ஜானை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
தூரத்தே வந்த வண்டி கொரியர் வண்டி .
அதில் வந்தவன் மில்லருக்கான பார்சல் என்று ஒரு பெட்டியைக் கொடுத்து விட்டு செல்ல அதை பிரித்து பார்க்கும்  வில்லியம் அதிர்கிறார் .

ஜான், மில்லரிடம் பேச ஆரம்பிக்கிறான்
 ''எனக்கு உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது .
உன்னைப்போல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு அமையவில்லை .
நீ இல்லாத நேரம் உன் வீட்டுக்கு சென்றேன் .
அங்கு உன்மனைவி இருந்தாள் .அவள் அழகைப் பார்த்து அவளுக்கு கணவனாக வாழ ஆசைப்பட்டேன் அதற்கு மறுத்து விட்டாள்.
அதனால் அவளை கொன்று விட்டேன்'' என்று கூற மில்லர் துடித்துப் போகிறான் .கர்ப்பிணியான அவள் தன்னிடம் கெஞ்சியதை கூறி மில்லரின் போபத்தை மேலும் தூண்ட தாங்க முடியாத வேதைனையும் பொறுக்க முடியாத கோபமும் கொண்டவன், ஜானை சுட்டுக் கொன்றுவிடுகிறான் .


ஜான் ,மில்லரின் வாழ்க்கை மீது பொறமை கொள்கிறான்.அவனுக்கு மில்லரின் பெரும் கோபத்தால் இறக்க நேரிடுகிறது .
பெரும் கோபம் கொண்ட மில்லருக்கு சட்டப்படி மரணதண்டனை
கிடைக்கப் போகிறது .
7 பாவங்கள் முடிவடைய படமும் நிறைவடைகிறது .


படத்தின் இயக்குனர் David Fincher .ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிக மிக பரிச்சயமானவர் .
ஒரு இயக்குனரை எடுத்தால் அவர் படங்கள் பெரும்பாலும் ஒரே வரிசையில் அடுக்கும்படியாக ஒரே மாதிரி எடுக்கப்பட்ட படங்களாக தான் இருக்கும் .காதல் படங்களை எடுப்பவர் ,கிராமிய படங்களை எடுப்பவர் ,குடும்ப கதைகளை எடுப்பவர் ,பிரம்மாண்ட படங்களை எடுப்பவர் என்று தங்களுகென்று வட்டத்துக்குள் வாழ்பவர்கள் தமிழில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் நிறைய உண்டு .
 ஒன்றுகொன்று மாறுப்பட்ட படங்களை இயக்கி வெற்றிபெற்ற இயக்குனர்கள் வரிசையில் David Fincherரும் ஒருவர்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம் .நம் ரசனைக்கு விதவிதமாக விருந்து படைப்பவர் .அவரின் இரண்டாவது படம் இது .1995ல் வெளியானது .

வில்லியமாக நடித்திருக்கிறார் மார்கன் ப்ரீமன்
வழக்கம்போல இயல்பான நடிப்பு.  நிதானமாக செயலாற்றும் முறை பொறுமையாக சிந்திப்பது என்று அனைத்தும் அந்த கதாபாத்திரமாகவே
மாறிவிட்டார் .

இந்த படத்தின் கதையை தழுவிதான் தமிழில் அந்நியன்  படம் எடுக்கப்பட்டது .தலையை வெட்டி பார்சல் அனுப்பும் காட்சி காக்க காக்க படத்தில் பயன்படுத்தபட்டது.அத்தோடு பல வசனங்கள் பல படங்களில் நகலெடுக்கப்பட்டுள்ளன.

பாவங்கள் பற்றி பேசும் கதை என்பதால் படத்தின் ஒளிப்பதிவும் அழுக்கு தோய்ந்த விதத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் 3 விதமாக எழுதப்பட்டது .வில்லியம் ஜானை கொல்வது போலவும் துரத்தல் காட்சிக்கு பிறகு ஜானை டேவிட் சுடுவது போலவும் அமைக்கப்பட்ட காட்சிகள் நிராகரிக்கப்பட்டு இறுதியில் பேசும்போதே டேவிட் கொல்லும் முடிவு படமாக்கப்பட்டது .
வசூல் அடிப்படையில் வெற்றி படமாகவும் விமர்சன ரீதியில் நல்ல படமாகவும் ஏற்கப்பட்டது இத்திரைப்படம் .



2015 ஜூலை மாத ஞானம் சஞ்சிகையின் உலக சினிமா தொடருக்காக எழுதப்பட்ட கட்டுரை
http://www.gnanam.info/yahoo_site_admin/assets/docs/G_182.21064002.pdf



Comments

Post a Comment

Popular posts from this blog

நாயகவிம்பத்தின் சிதைவுகள்