What time is it there?







பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம்
இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் 
ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்
 யாரும்  இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ...
பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும்  விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க 
யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் )
பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் 
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் 
உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ...
அப்படிப்பட்ட மனிதர்களின் தவிர்க்க முடியாத தனிமையை திரைமொழியில் தந்த படம் தான் What time is it there?


கேங் தந்தையின் திடீர் மரணத்துக்கு பிறகு இரவுகளில் பயம் கலந்த தனிமையை உணர்கிறான் .தூக்கம் வராது விழித்திருந்து பின்னிரவுகளில் உறங்குகிறான் . கடிகாரங்களை விற்பனை செய்யும் அவன் வாழ்வில் நேரத்தை கடத்த துணையாக யாருமில்லை .
வேலை,வீடு தவிர்த்து அவன் உலகத்தில் எதுவுமில்லை யாருமில்லை .

ஒரு நாள் கேங்கிடம் கடிகாரம் வாங்க வருகிறாள் சியி என்ற இளம் பெண் .இரண்டு நாட்டின் நேரத்தை காட்டக்கூடிய கடிகாரத்தை கேட்க கேங்கிடம் அது போன்ற கடிகாரங்கள் இல்லை .
ஆனால் கேங் அணிந்திருப்பது அது போன்ற கடிகாரம் என்பதை அறிந்த சியி அதை தனக்கு விற்பனை செய்யுமாறு கேட்கிறாள் .முதலில் தரமறுக்கும் கேங் அதன் பிறகு சம்மதிக்கின்றான் .
தான் பாரிஸ் செல்வதாக கூறிவிட்டு கேங்குக்கு பரிசாக ஒரு கேக்கையும் வழங்கி விட்டு சியி செல்ல அவளை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் கேங் .
கேங் பாரிஸுக்கு சென்ற சியி நினைவாகவே இருக்கிறான் .பாரிஸ் நேரத்துக்கும் தன் நாட்டின் நேரத்துக்கும் 7 மணித்தியாலம் வித்தியாசம் என்பதை அறிந்து கொண்டு தன் கடிகாரத்தில் பாரீஸின் நேரத்துக்கு ஏற்ப மாற்றி வைக்கிறான் .
விற்பனைக்காக தன்னிடம் உள்ள கடிகாரங்கள்  ,வீட்டின் கடிகாரம் ,செல்லும் இடத்தில் உள்ள சகல கடிகாரங்களின் நேரத்தையும் மாற்றி வைக்கிறான் .



கேங்கின் தாயார் இறந்து போன தன் கணவருக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறார் .மகனுக்காக உணவு பரிமாறும் போது கணவருக்காகவும் உணவு பரிமாறுகிறாள் .''உங்களுக்காக சமைத்திருகின்றேன்'' என்று சொல்லிக்கொண்டே உணவை பரிமாறுகிறாள் .

ஒரு கரப்பான் பூச்சியை மகன் கேங் கொல்ல முயல தடுக்கிறார் ''அது உன் அப்பாவின் மறு பிறவியாக இருக்கலாம் அதை கொல்லாதே '' என்று சொல்கிறார் .ஆனால் அதை கேட்காத கேங் கரப்பான் பூச்சியை மீன் தொட்டிக்குள் போட தொட்டியில் இருந்த பெரிய மீன் அதை தின்றுவிடுகிறது .அம்மா வருத்தத்துடன் அதை பார்க்கிறாள் .

மகன் கடிகார நேரத்தை மாற்றி வைத்ததை அறியாத தாயார், ''தந்தை தான் இதை மாற்றி இருக்கிறார் அவர் வரப்போவதை நமக்கு உணர்த்துகிறார்'' என்று கூறி அந்த கடிகாரத்தை வணங்க தொடங்குகிறார் .

நள்ளிரவில் விழிக்கும் தாயார் கணவருக்காக உணவு சமைத்து விட்டு வீட்டின் வெளிச்சம் வரும் பகுதிகளை மூடுகிறாள் .
மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தனியாக அமர்ந்திருக்கும் தாயாரை பார்த்து கோபப்படும் மகன் கேங் ''என்ன செய்றிங்க?'' என்று கேட்கிறான் .
''உன் அப்பா வெளிச்சத்தை பார்த்து பயப்படுகிறார் அதான் வர தயங்குகிறார் வெளிச்சம் வருகிற இடங்களை நான் அடைத்து விட்டேன்'' என்று கூறுகிறாள் .''முட்டாள்  தனமாக நடந்து கொள்ளவேண்டாம்'' என்று சொல்லி தாயார் ஒட்டிய அடைப்புகளை எல்லாம் கிழிகிறான் கேங் .
அதை பார்த்து கோபப்படும் தாயார் ''அப்பா விரும்பும் படி வீட்டை இருக்க விடமாட்டேன் என்கிறாய் நீ தான் அவரை வர விட மாட்டேன் என்கிறாய் ''என்று கூறி அழ அவளை மாற்ற முடியாது என்று உணரும் மகன் கேங் அங்கிருந்து செல்கிறான் .
கணவர் வருவார் என்று நம்பும் தாயார் பிரார்த்திக்க ஆரம்பிக்கிறார்



பாரிஸுக்கு சென்ற சியிக்கு தனிமை மட்டுமே துணை . தனியாக அறையில் தூங்கும் போது மேல் தளத்தில் யாரோ நடமாடுவது போல உணர்வு தோன்ற இரவில் உறக்கம் வராது தடுமாறுகிறாள் .
மொழி தெரியாத இடத்தில் தனிமையை உணரும் சியி சாலைகளில் ,ரயில் நிலையங்களில் தனியே நடந்து திரிகிறாள் .

ஒரு நாள் உணவகத்துக்கு வருகிறாள் சியி .உடல் நலமில்லாது இருக்கும் சியிக்கு ஒரு பெண் உதவுகிறாள் .இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது .அன்றிரவு இருவரும் ஒன்றாக தங்குகிறார்கள் .

அன்றிரவு ....
தனது காரில் தனியாக அமர்ந்திருக்கிறான் கேங் ...வீட்டுக்கு போக மனமில்லாது வெறுமையை உணர்ந்தவனாக அமர்ந்திருக்கிறான் .
அவனை தேடி ஒரு விலை மாது வருகிறாள் . அவளோடு உறவு கொள்ள தொடங்குகின்றான் கேங்

தன் கணவர் திரும்பி வருவார் என்று நம்பும் தாயார் தன்னை அழகுபடுத்திக் கொண்டு தந்தையின் அறைக்கு வருகிறாள்
படுக்கையில் அமர்ந்து ஒரு ஓலைப்பெட்டியை கணவனாக நினைத்து முத்தமிடுகிறாள் கொஞ்சம் கொஞ்சமாக சுய இன்பத்தில் ஈடுபடத்தொடங்குகிறாள் .

ஒரே கட்டிலில் படுத்திருக்கின்றார்கள் சியும் தோழியும் .
தோழி உறங்கிவிட சியிக்கு தூக்கம் வராமல் தவிக்கிறாள் .
ஒரு கட்டத்தில் மெல்ல தோழியின் அருகில் சென்று அவளோடு உறவில் ஈடுபட முனைகிறாள் .

தனிமை பொறுக்க முடியாத அந்த மூவருக்கும் தனிமையிலிருந்து தற்காலிக விடுதலை அளிக்கிறது காமம்  .

விடிந்ததும் வீடு திரும்பும் கேங் அப்பாவின் புகைப்படத்துக்கு கீழே உறங்கும் தாயை பார்கிறான் .மனதில் குற்றஉணர்வு தோன்ற தாயின் அருகில் சென்று படுகிறான் .
பாரிஸில் தோழியை பிரிந்து அறையை விட்டுக் கிளம்புகிறாள் சியி .
ஓர் ஏரிக்கரையில் சென்று அமர்கிறாள் .
அவள் கண்கள் கலங்குகின்றன கண்ணீர் பெருக ..தீராத தனிமையின் துயரோடு முடிவடைகிறது திரைப்படம் .
கடிகாரம் ,ரயில் நிலையம் ,கல்லறை தோட்டம் ,திரையரங்கம் ,மாடிப்படி ,கழிவறை ,மனிதர்கள் குறைவான சாலை ,லேசான வெளிச்சம் கவிழும் மாடியறை ,மீன் தொட்டி ,ஏரிக்கரை என்று படத்தில் காட்டப்படும் இடங்கள் பொருட்கள் எல்லாமே தனிமையின் குறியீடுகளாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன .

கேங் கடிகாரங்களில் நேரத்தை மாற்றி வைப்பதும் ,பிரான்ஸ் நாட்டு படங்கள் பார்ப்பதும் அவனின் தனிமையை வெளிப்படுத்தும் காட்சிகள் .
சியி 2 நாட்டு நேரம் காட்டும் கடிக்காரத்தை வாங்கும் காட்சியில் வெளிப்படும் பாதுகாப்பற்ற மனநிலையும் தனிமையும் இறுதிக்காட்சி வரை நீடிக்கிறது .
நள்ளிரவில் உணவு தயாரிப்பது ,மீனை கணவனாக நினைத்து பேசுவது ,
கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் கண்ணீருடன் காத்திருப்பது என்று திடிரென்று ஏற்பட்ட தனிமையை ஏற்கவும் விலக்கவும் முடியாது தவிக்கும் தாயாரின் நிலை ...
இப்படி மூவரின் காட்சிகள் வழியே தவிர்க்க முடியாத தனிமையை திரையாக்கியிருகிறார் இயக்குனர் 

தனிமை என்ற ஒற்றை வார்த்தை ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படி எல்லாம் தாக்கம் செலுத்துகிறது என்பதை பதிவு செய்த இந்த தைவான் நாட்டு திரைப்படத்தின் இயக்குனர் சாய் மிங் லியாங் 
சிக்காகோ திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான  ஜுரி விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை பெற்றுக்கொண்டது இந்த படம் .2001 க்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கபனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .


இந்த படம் உணர்த்துவது முழுக்க முழுக்க தனிமையை ...தீராத தனிமையில் நேரம் நகரவே நகராது.
 படத்தில் அந்த 3 கதாபாத்திரங்கள் உணரும் தனிமையை, வெறுமையை, நேரம் போகாத எரிச்சலை படம் பார்க்கும் நாமும் உணரவேண்டும் என்பதற்காவே வித்தியாசமாக படத்தை எடுத்திருகிறார்கள் .
மிக நீளமான காட்சிகளால் அவர்களது செயல்களை முடியும் வரை படமாக்கியுள்ளார்கள் .கேமரா அசைவே இல்லாமல் ,குளோசப் காட்சிகள் இல்லாமல் எடுக்கபட்டிருகிறது. வித்தியாசமான நேர்த்தியான ஒளிப்பதிவு .
படத்தில் பின்னணி இசையே இல்லை ...இயற்கையான சத்தங்கள் தான் 
குறைவான கதாபாத்திரங்கள் ,அரிதான வசனங்கள் ,உணர்வுகளை காட்சிகள் வழியே கடத்தல் என்று அற்புதமாக கையாளப்பட்ட திரைமொழி ஆச்சர்யப் படுத்துகிறது.

Comments

  1. சிந்திக்க வைத்த பதிவு தோழி....super & feelingfull...I watched movie from ur Excellent words,after long time...keep it up bavi

    ReplyDelete
  2. தனிமை மரணத்தை விட கொடியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dyketactics

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....