Celluloid

Celluloid
வாரம் வாரம் புதுப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.பழைய படங்களை பார்க்கும் இன்றைய தலைமுறையை விரல்விட்டு எண்ணிவிடலாம் .அந்தப்பழையபடங்கள்தான் சினிமாவின் முன்னோடி. அதிலிருந்து தான் சினிமா வளர்ச்சியடைந்து வந்திருகிறது .
அந்த படங்கள், சலிப்பு தருகிறது என்ற ஒரே வார்த்தையில் நிராகரித்து விடுகிறோம் .அன்று அவர்களுக்கு என்ன வளம் இருந்தது ?
அந்த படங்களை குறைந்த தொழில்நுட்ப வசதியோடு அவர்கள் எடுக்க முனைந்த போது எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் .
கறுப்பு வெள்ளை படங்களில் சினிமாவை தொடக்கி வைத்தவர் யார் ?சினிமா எப்படி உருவானது ?எப்படி வளர்ச்சியடைந்தது ? அந்த கலைஞர்களின்  வலி நிறைந்த வரலாறுகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? நாம் அறியாத ஒரு கலைஞனுக்கு மரியாதையை செய்யும் அற்புத படைப்பு Celluloid 


J.C.டேனியல் மலையாள சினிமாவின் தந்தை .இந்த அடையாளத்தை பெற்றுக்கொள்ள அந்தக் கலைஞன் தொலைத்தது தன் ஒட்டுமொத்த வாழ்க்கையை .சினிமா கனவுகள் தின்ற கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Celluloid.    

மேலைத் தேயர்களால் உருவாக்கப்பட்ட சினிமாவை கிழைத்தேய பால்கே கையாண்டு கொண்டிருந்த காலம் .
J .C .டேனியல் பால்கேயை சந்திக்க மும்பை வருகிறார் .இதயம் முழுவதும் சினிமா கனவுகள் நிரம்பியிருக்க கண்களில் எதிர்ப்பார்ப்பு கலந்த ஆர்வத்தோடு பால்கேயிடம் சினிமா எடுக்க வேண்டும் என்ற தனது கனவை சொல்லி கற்றுத்தர கேட்கிறார் .
பால்கே ,தனக்கு நேரமில்லை கற்றுத்தர முடியாது என்று மறுத்துவிட சினிமா படப்பிடிப்பை பார்க்கும் வாய்ப்பையாவது தாருங்கள் என்று கேட்கிறார் டேனியல். அவருடைய ஆர்வத்தை பார்த்து சம்மதிக்கும் பால்கே படப்பிடிப்பை பார்க்க அனுமதித்ததோடு படம் பிடித்ததை திரையிட்டும் காட்டுகிறார் .
ஆசையும் மகிழ்ச்சியுமாக அந்த படத்தை பார்த்து ரசிக்கிறார் டேனியல் .  



 ஊருக்கு திரும்பும் டேனியல் மனநிறைவோடு தன் மனைவி ஜெனட்டிடம் தன் சினிமா கனவுகளை விபரிக்கிறார் .பிலிம் ரோலைக் காட்டி சினிமா எடுக்கும் தன் எண்ணத்தையும் முன்வைக்கிறார் .
மனைவியும் சம்மதிக்க அடுத்தடுத்த வேலைகளை மும்முரமாக ஆரம்பிக்கிறார் .தன் தோழனும் நாடக நடிகனுமான ஜான்சனின் உதவியை பெற்றுக்கொண்டு நடிகர்களை தேர்வு  செய்கிறார் .
படமெடுக்க குடும்ப சொத்தை விற்றுவிட்டு கேமரா வாங்குவது பற்றி தமிழ் நாட்டுக்கு சென்று நடராஜ முதலியாரிடம் ஆலோசனை கேட்கிறார் .அவருடைய வெள்ளைக்கார ஒளிப்பதிவாளரை சந்தித்து பேசி அவருடைய உதவியைக்கொண்டு கேமராவை வரவழைக்கிறார் .படமெடுக்க வேண்டி ஸ்டுடியோவையும் நிர்மாணிக்கிறார் .அதுதான் கேரளாவின் முதல் ஸ்டுடியோ Travancore National Pictures.
எல்லோரும் புராண இதிகாசக் கதைகளை படமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது 
சார்லிசாப்ளினின் 'தி கிட்' படத்தை பார்த்து ஒரு சமுககதையை எடுக்க தீர்மானிக்கிறார் .


''விகதகுமாரன்'' (The Lost Child)  இது தான் டேனியலின் படத்தின் பெயர் 
சரோஜினி -சந்திரகுமாரன் உடன் பிறந்தவர்கள் .  வில்லன் பூத நாதனால் சிறுவன் சந்திரகுமாரன் கடத்தப்படுகிறான் .நீண்டகாலத்திற்கு பிறகு,சரோஜினியை எதிர் வீட்டில் குடிவரும் ஜெயச்சந்திரன் காதலிக்கிறான் .கொழும்புக்கு செல்லும் ஜெயச்சந்திரனின் உடமைகளை பூதநாதன் களவாடிக் கொண்டு போக அங்கு ஜெயச்சந்திரனுக்கு உதவுகிறான் சந்திரகுமாரன் .
சந்திரகுமாரனுடன் ஊர் திரும்பும் ஜெயச்சந்திரன் சரோஜினியை சந்திக்கிறான் .எதேச்சையாக சந்திரகுமாரன் முதுகிலிருக்கும் மச்சத்தை பார்க்கும் சரோஜினி தன் தம்பியை அடையாளம் காண்கிறாள் இறுதியில் பிரிந்தவர்கள் ஒன்று சேர சுபமாக முடிகிறது கதை 

தொலைந்து போகும் சிறுவனாக தன் மகனையும், ஜெயச்சந்திரனாக தானும் நடிக்க முடிவு செய்கிறார் டேனியல். வில்லன் பூதநாதனாக நாடக நடிகனான நண்பன்  ஜான்ஸனையும்தெரிந்தவர்களை மற்ற கதாபாத்திரங்களுக்கும் தேர்வு செய்கிறார் 


கதாநாயகியாக நடிக்கப் பெண்கள் அக்காலத்தில் முன்வருவதில்லை .ஆண்கள் தான் பெண்வேடம் போட்டு நடிப்பார்கள் .ஒரு சில ஆங்கிலோ இந்தியப் பெண்கள் மட்டும் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .
அதில் ஒரு பெண்ணை டேனியல் நடிக்க அழைக்க, அரசியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க இது ஒரு சமுகக்கதை என்று கூறுகிறார் . அதிக சம்பளம் தந்தால் நடிக்க வருவதாக கூறுகிறார்கள் .வேறு வழியில்லாத டேனியல் சம்மதிக்கிறார் .ரயிலில் முதல் வகுப்பில் தான் பயணிப்போம் ,குதிரை வண்டியில் ஏறமாட்டோம் காரில் தான் வருவோம் ,மகாராஜாவின் அரண்மனையில் தான் தங்குவோம் என்று தொல்லைக் கொடுக்க இவர்களை நடிக்க வைப்பது கஷ்டம் படத்தின் ஜீவன் போய் விடும் என்பதால் அவர்களை திருப்பி அனுப்பி விடுகிறார் டேனியல் .
நண்பன் மூலமாக கிராமகூத்தில் நடிக்கும் ரோசம்மாவை காணும் டேனியல் அவளை கதாநாயகியாக்கலாம் என்று முடிவு செய்கிறார் 


தலித் பெண்ணான ரோசம்மாவை நாயர் பெண்ணாக மாற்றுகிறது சினிமா .அற்புதமாக நடிக்கிறாள் ரோசம்மா.
ஒரு தலித் பெண்ணை வீட்டுக்குள் அழைகிறார்கள் ,நல்ல ஆடைகள் நகைகள் கொடுத்து அழகு படுத்துகிறார்கள் ,சக மனிஷியாக மதித்து அவளிடம் அன்பு காட்டுகிறார்கள் .ரோசம்மா நெகிழ்ந்து போகிறாள் .
படப்பிடிப்பும் முடிவடைகிறது .படம் சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டு வெளியிடத்தயாராகிறது.கெப்பிடல் திரையரங்குக்கு வரும் ரோசம்மாவை பார்த்து, ஒரு தலித் உள்ளே வந்தால் திரையரங்கில் நுழைய மாட்டோம் என்று கூற ரோசம்மாவை அடுத்த காட்சி பார்க்கும் படி வெளியே நிறுத்துகிறார்கள்.
படம் ஆரம்பிகிறது .
பெருமிதமும் மகிழ்ச்சியுமாக டேனியல் பார்த்திருக்க திரையில் ரோசி வந்ததும் எல்லோரும் சத்தமிட தொடங்குகிறார்கள் .ஒரு தலித் பெண்ணை நாயர் பெண்ணாக காட்டியது குலக்குற்றம் என்று கூட்டம் ஆர்ப்பரிக்க டேனியலின் சினிமா, எதிர்ப்புக்களால் நிறுத்தப்படுகிறது .
வெளியே நின்று கொண்டிருந்த ரோசியை பார்த்தவர்கள் அவளை கெட்ட வார்த்தைகள் பேசி விலைமகள் என்று பெயரிட்டு அடிக்க துரத்துகிறார்கள் .ரோசியின் பெற்றோரை அடித்து உதைத்து அவள் வீட்டை தீக்கிரையாக்கின்றார்கள்  


சாதி வெறி டேனியலின் உழைப்பை, ஆசையை, கனவை கொலை செய்ய அங்கு வாழ முடியாத சூழ்நிலையில் குடும்பத்துடன் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்கிறார் டேனியல் .
புறக்கணிப்பின் வலி மனதில் இருந்தாலும் வாழ்க்கையை கொண்டுநடத்த வேண்டும் என்பதால் சினிமாவை தவிர்த்து வாழத்தொடங்குகின்றார் டேனியல் .பல் மருத்துவராக வாழ்க்கையை தொடரும் போது ஒரு நாள் பி.யு.சின்னப்பாவை சந்திக்கிறார் .சின்னப்பா டேனியலின் மனதிலிருந்த கலையார்வத்தை தூண்டி விட மறுபடியும் சினிமா எடுக்கும் ஆசை டேனியலுக்குள் துளிர்க்கிறது .ஜெனட் தடுத்தும் உழைத்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு போனவர் திரும்பி வருகையில் தோல்வியை மட்டும் சுமந்து கொண்டு வருகிறார் .


பல வருடங்களுக்கு பிறகு 
வசதியில்லாமல் வருத்ததோடு வாழும் டேனியல் தம்பதியை சந்திக்கிறார் பத்திரிகையாளர் கோபால கிருஷ்ணன் 
மலையாள சினிமாவை ஆரம்பித்து வைத்த டேனியலை உலகுக்கு வெளிக்காட்ட அரும்பாடு படுகிறார் கோபால கிருஷ்ணன் .
TR சுந்தரத்தின் பேசும் படமான பாலன் திரைப்படம் தான் மலையாளத்தின் முதல் சினிமா .அதற்கு முன்னர் எடுக்கப் பட்ட சலனப் படமான விகிதகுமாரனை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் .காரணம் சாதி 
ஆண்டுகள் கடந்தாலும் சாதி தன் முகத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை .
கிறிஸ்தவரான டேனியல் ஒரு நாடார். அவர் வம்சம் எப்படி மலையாளி இனத்தில் சேரும் அதனால் அவருடைய படம் மலையாளிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட நாடார் படம் என்று தான் சொல்லலாம் என்று கூறுகிறார்கள் .
ஒரு புகைப்படமும் முதல் நாள் நோட்டிசும் மட்டும் தான் எஞ்சி உள்ள ஆவணங்கள் ,விகித குமாரனின் பிரிண்ட் இல்லாததால்  கோபால கிருஷ்ணனின் போராட்டங்கள் தோல்வியில் முடிகிறது .
கேரளா அரசின் எந்த உதவியும் டேனியலுக்கு கிடைக்கவில்லை .வறுமையும் நோயும் தோற்றுப்போன வலியும் டேனியலின் இறுதிக்காலத்தில் துணையாக 1972 ல் அவர் உயிர் பிரிகிறது .
அவருடைய இறப்புக்கு பின் பல வருடங்கள் கழித்து கேரளா அரசாங்கம் மலையாள சினிமாவின் தந்தை டேனியல் தான் என்பதை ஒப்புக்கொண்டு அவருக்கான அங்கீகாரத்தை வழங்குகிறது.
அந்த மேடையில் டேனியலின் இளையமகன் ஹாரிஸ் ஒரு விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விகிதகுமாரனின் பிலிம் ரோலை எரித்ததை கண்ணீர் மல்க சொல்கிறார் .
தன் தந்தையின் உழைப்பை சாதனையை தன் அறியாமையால் அழித்து விட்டதை எண்ணி ஹாரிஸ் கதறி அழுது மன்னிப்பு கேட்பதோடு படம் நிறைவு பெறுகிறது .


நேர்மையான படைப்பு 



வெளிப்பார்வைக்கு இது டேனியலின் வாழ்க்கை .ஆனால் எந்தப்படத்திலும் சொல்லப்படாத ஆழமான உண்மைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன .சாதி அரசியலை இவ்வளவு நேர்மையாக முன்வைத்த திரைப்படத்தை நான் பார்த்ததில்லை .எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை இத்தனை தைரியமாக நேர்மையாக எடுத்தமைக்கு இயக்குனருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் 

நாம் எல்லோருமே மனிதர்கள் .ஆனால் மனிதத்தை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் மதிப்பு கொடுகின்றோம் .
நடந்து வரும் பாதையில் அந்த மனிதர்கள் எதிர்ப்பட்டாலே பாவம் என்று கருதும் மக்களிடையே சாதி பற்றி எதுவும் யோசிக்காமல் படம் எடுக்கிறார் டேனியல் .சினிமாவில் தீண்டாமை இல்லை என்று ஒரு சமுக மாற்றத்தை ஏற்படுத்திய டேனியலை ஊரை விட்டே விரட்டி அடிக்கிறது சாதி  .
ரோசம்மாவின் பெற்றோரிடம் ''சினிமாவில் நடித்தால் நீ என்ன உயர்ந்து விடுவாயா ? எங்க கிட்ட தான் வேலைக்கு வரணும்'' என்ற மிரட்டல் வார்த்தைகளில் வெளிப்படுகிறது சாதி  மேன்மை .
ஒரு தலித் பெண் தியேட்டருக்குள் நுழைவதா என்று ஆவேசப்பட்டவர்கள் சாதியின் பெயரால் மனிதம் மறந்தவர்கள் .
ஒரு நாடார் எடுத்த படம் என்ற அடையாளத்தோடு டேனியலின் படம் திரையிடப்படுகிறது .
நாடரும் தலித்தும் தங்கள் சாதியை இழிவு படுத்தியதாக கூறி டேனியலின் உழைப்பை நிராகரித்ததோடு வாழ்க்கையையும் அழிக்கிறார்கள் .
சாதியின் பெயரால் துரத்தப்பட்ட ரோசி இரவின் நிசப்ததோடு தொலைந்து போகிறாள் .
30 வருடங்களுக்கு பிறகு ,
பிராமணர் எடுத்த சினிமாவை பேசும் படமாக அங்கீகரித்து விட்டு டேனியல் மலையாளியே அல்ல என்று சப்பைக்கட்டு கட்டும் போதும் சாதி தன் முகத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை என்று புரிகிறது .
இன்றும் கூட சாதியின் பெயரால் சிக்கித் தவிக்கும் படைப்புக்கள் இருக்கின்றன .

சாதியோடு இன்னொரு விடயத்தையும் இயக்குனர் பதிவு செய்கிறார் .

டேனியலின் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் முதன் முதலாக ரோசியைப் பார்த்து "இவ்வளவு கறுப்பான பெண்ணா கதாநாயகி? ஆபிரிக்கர்களைப் போல இருப்பாளே '' என்று கூறும் போது நிறவெறி மனப்பான்மையை பதிவு செய்கிறார் .நமக்கு சாதி போல அவர்களுக்கு நிறப்பிரிவினை .
உலகம் மாறப்போவதில்லை .மனிதன் தெய்வத்தை படைத்தான் ;தெய்வம் சாதியை படைத்தது .மனிதன் ,தெய்வம் ,சாதி மூன்றும் சேர்ந்து உலகை கூறு போட்டது . படத்தில் சொல்லப்படும் இந்த வசனம் எத்தனை முக்கியமானது .சினிமா சினிமாதான் .அது முழுக்க முழுக்க கலைஞனின் சினிமா .சாதிக்காரனின் சினிமா அல்ல என்பதை என்று நாம் உணரப்போகின்றோம் ? 

தொலைந்துபோனவள்

படத்தின் ஜீவன் ரோசம்மாவின் கண்களில் இருப்பதை கண்டேன் .
ரோசம்மா மலையாளத்தின் முதல் கதாநாயகி .
அவளுக்கு நடந்த கொடுமை காலத்தால் அழித்து விடமுடியாது .
ஒரு தெருக்கூத்து பெண் முதன் முதலாக சினிமாவில் கதாநாயகி என்று கூறும் போது எப்படி உணர்வாள் ? சினிமா என்பதே என்னவென்று அறியாத அந்த பெண் தன்னை எல்லாம் சினிமாவில் நடிக்க அழைக்கின்றார்களே என்று மகிழ்வும் தயக்கமுமாக தோழியிடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறாள் .நான் என்ன அழகாவா இருக்கேன் என்று சந்தேகமாக கேட்க தோழி ஒரு கண்ணாடிச்சில்லில் அவள் முகத்தை காட்ட 
அதில் தெரியும் ரோசம்மாவின் கறுத்த முகமும் பின்னணியில் சித்தாராவின் குரலில் ஒலிக்கும் பாடலும்  மழை நேர வானவில்லின் அழகு ...
இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த பாடல் ...
ரோசம்மாவின் எளிமையான அழகுக்கு ஈடாக இசையில் தவழ்கிறது வரிகள் 

ஆர்வத்தோடு முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றால் ரோசம்மா காணாத ஒரு வாழ்க்கை அவளுக்கு காத்திருந்தது .எல்லாரும் அவளை வரவேற்கிறார்கள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை .
வீட்டு வாசலுக்கு வந்தாலே விரட்டுபவர்கள் மத்தியில் அவளை உள்ளே அழைகிறார்கள் .
பெஞ்ச்சில் அமர சொல்ல தயங்கிய படியே தரையில் அமர்கிறாள் .தான் நாயர் பெண்ணாக நடிக்கப் போகிறோம் என்பதையே அவளால் நம்பமுடியவில்லை .அணிந்து கொள்ள நல்ல ஆடைகளும் ஜேனட்டின் நகைகளையும் தரும் போது நான் அணிந்தால் திரும்பி அதை நீங்கள் அணிவது பாவம் என்று மறுக்க ஜெனட் அன்போடு அவளை அணிய சொல்கிறாள் .
நடப்பது கனவா நனவா என்று அறியாத நிலையில் சந்தோசத்தில் டேனியல் சொல்லும் படி செய்கிறாள் .
எல்லாரும் உள்ளே அமர்ந்து உணவருந்தும் போது ரோசம்மா மட்டும் வெளியிலிருந்து கஞ்சி குடிக்கிறாள் .எல்லோரும் சாப்பிட்டு தட்டு வைத்து போக அதை சுத்தம் செய்யத் தொடங்குகிறாள் .டேனியலும் ஜெனட்டும் அவள் தயக்கத்தை போக்க முயற்சி செய்கிறார்கள் .ரோசம்மா என்ற பெயரை மாற்றி ரோசி என்று சூட்டுகிறார்கள் .
இறுதி படப்பிடிப்பன்று தன் வேஷத்தை கலைத்து விட்டு பழைய ரோசம்மாவாக வெளியேறும் போது அவள் உணர்வது நம் மனதை கனப்படுத்துகிறது .
பட வெளீட்டைப் பற்றி அறிவிக்கும் போது இதோ நம் நாயகி ரோசி என்று கூற வெட்கமும் சந்தோசமுமாய் ரோசி புன்னகைப்பது பேரழகு 
படம் பார்க்க ஆர்வமாக ஓடி வரும் ரோசியை சாதியை காரணம் காட்டி வெளியனுப்ப வாசலிலே இருட்டும் வரை ஏக்கத்தோடு காத்திருப்பதும் எல்லோரும் விலைமகள் என்று அடிக்க துரத்தும் போது செய்வதறியாது அழும்போதும் மனம் ரணப்படுகிறது .
ரோசியாக சாந்தினி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் .
கறுத்த முகமும் எப்போதும் ஆர்வப்பார்வை சிந்தும் கண்களும் குழந்தை சிரிப்புமாக மென் சோக கவிதையாக  மனம் எங்கும் நிறைகிறாள் .
தான் நடித்த படத்தை பார்க்க அனுமதிக்கபடாது விரட்டியடிக்கப்பட்ட அவளை அன்று வாழவிடாமல் இன்று வரலாற்றில் வாழவைத்துக் கொண்டிருக்கிறோம் .

கனவுகளின் காதலன் 


ப்ரிதிவிராஜ் கண்களில் தெரிவது என்ன ?டேனியலின் ஆர்வமும் நம்பிக்கையும் 
அதைக் கொண்டு வருவது அத்தனை சாத்தியமா என்ன ? சினிமா ஆர்வம் என்கிற உணர்வு மனதிலிருந்து எழுகிறது அதை விழிகளின் வழியே கொண்டு வருவது அத்தனை சாத்தியமல்ல அற்புதமாக செய்திருக்கிறார் .
கேமராவை கண்டு உற்சாக மடைவதும் ஊர் திரையரங்கை பெருமை பொங்க பார்ப்பதும் 
விளக்கு வெளிச்சத்தில் பிலிம் ரோலை காட்டி மம்தாவுக்கு அறிமுகப்படுத்தும் போது அவர் கண்களின் தெறிக்கும் ஆர்வம் அந்த வெளிச்சத்தை விட பிரகாசமானது .
எல்லாவற்றையும் துறந்து பல் மருத்துவனாக வாழ்ந்து பின்னர் மீண்டும் சினிமா ஆசையில் தோற்று போனபின்னர் அவருள் தெரியும் விரக்தி ,
ஹாலிவுட்டில் படமெடுத்த கலைஞனின் வாழ்க்கையை சொல்லி தன் நிலைமை அதுதான் என்று கூறும் போதும், தன் கண்முன்னாலே பிலிம் ரோல்கள் எரிக்கப்படும் போதும் அமைதியாக வேதனையை சுமந்த படி அமர்திருப்பதும், மரணப்படுக்கையிலும் சினிமா பற்றிய எண்ணத்தோடு இறக்கும் போதும் ...
சினிமா ஆர்வத்தில் தன்னை தொலைத்தவர்களை எல்லாம் நமக்கு காட்சிபடுத்துகிறார் .ப்ருதிவிராஜ் எவ்வளவு அற்புதமான நடிகன் என்பதை  இந்த படத்தில் உணரலாம். 

இந்த படத்தை பார்க்கும் சினிமா ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனும்  நிச்சயம் அழுவான் .அவன் கண்ணீருக்குள் சினிமா என்கிற அற்புத கலை தரும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
தன் வாழ்க்கையை தொலைத்து மலையாள தேசத்துக்கு சினிமாவை கண்டுபிடித்து கொடுத்த டேனியல் பற்றி பேசுகிறது படம்.
 நம் மத்தியில் இன்னும் வெளித்தெரியாத டேனியல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் .
சினிமா ஆர்வம் கொண்டு சினிமாவை நேசிக்கும் நபர்களில் டேனியல் இருக்கிறார் .
சினிமா எடுக்கும் ஆர்வத்தில் அலைந்து திரிபவன் ,முதல் பட வாய்ப்புக்காக ஏங்கி தவிப்பவன் ,பல போராட்டங்களுக்கு மத்தியில் படம் எடுப்பவன் ,எடுத்த படம்  வெளியாகமலோ அங்கீகாரம் கிடைக்காமலோ இருப்பதை எண்ணி வருந்துபவன் இவர்களுக்குள் எல்லாம் டேனியல் வாழ்கிறார்.புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொருத்தனும் டேனியல் தான் .
அவர்களின் கண்ணீர் எல்லாம் டேனியலுக்கு சமர்ப்பணம்

Comments

Popular posts from this blog