கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா



கலை சினிமா vs கமர்ஷியல் சினிமா

கடந்த வருட இறுதியில் 7வது சார்க் திரைப்படவிழாவின் Materclass நடைபெற்றபோது, முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் 2 முக்கியமான கேள்விகளையும் அதற்கு வழங்கப்பட்ட பதில்களினால் பெற்ற புரிதல்களையும் இங்கு பகிர்கின்றேன்.

உலகம் முழுக்க சில கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டும், பதில்கள் சொல்லப்பட்டுக் கொண்டுமிருப்பது வழக்கம். அத்தகைய  சினிமா தொடர்பான கேள்விகளில் Masterclass, Workshop, Lab என்று சகல இடங்களிலும் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று... 
‘கலைப்படங்களா... கமர்ஷியல் படங்களா... சிறப்பானவை? எதனை நோக்கி நம் பயணமும் பார்வையும் அமையவேண்டும்?’ என்ற கேள்வியாகும். இதற்கு வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு இடங்களில் பலவிதமான பதில்களை கொடுத்திருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற மிக சுருக்கமான தெளிவான பதிலாக  Griffith Film Schoolபேராசிரியரான Anne Démy-Geroe  கூறிய பதிலை எழுதுகின்றேன்.

Q1
பார்வையாளர் :
"Crouching tiger, Hidden dragon ஒரு கமர்சியல் படம்... இந்த கலைத்தன்மையற்ற போலியான படைப்பை எங்களால் முழுவதுமாக பார்க்கவே முடியவில்லை. அந்த போலிப்படைப்பு திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறந்த திரைப்படமாக அங்கிகாரம் பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது எந்தவிதத்தில் நியாயம் ?"

Anne Démy Geroe : 
"சினிமாவை நாங்கள் கமர்சியல் சினிமா, கலைத்துவ சினிமா என்று அணுகுவதில்லை. Creativity (அழுத்தமாக சொல்கிறார்). க்ரியேட்டிவிட்டியை நாங்கள் கவனிக்கின்றோம்.  க்ரியேட்டிவிட்டி உள்ள சினிமா, அதன் க்ரியேட்டிவ் தன்மைகள் என்ற ரீதியில் பல கோணங்களில் பல தளங்களில்  படங்களை அணுகுகின்றோம். எந்த படமாக இருந்தாலும்  க்ரியேட்டிவிட்டி என்பதே அங்கு தீர்மானங்களை எடுக்க உதவுகின்றது."

Q2
பார்வையாளர் : 
"திரைப்பட விழாவில் பல படங்களை பார்த்து முடிவு செய்கையில் போட்டிக்கு வரும் நூற்றுக்கணக்கான படங்களையும் முழுமையாக பார்ப்பீர்களா? இல்லை ... வெறும் 5 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு படங்களை தேர்வு செய்வீர்களா?"

Anne Démy Geroe : 
"திரைப்பட விழாவிற்கு வரும் படங்களை நடுவர்கள் பெரும்பாலும் முழுமையாக பார்ப்பதில்லை என்பதைவிட தற்காலத்தில் பார்க்க முடிவதில்லை. ஒரு சில நடுவர்கள் மட்டுமே முழுமையாக பார்க்கும் வழக்கத்தை கொண்டிருகின்றனர். சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் ஒரு நடுவர், போட்டிக்கு வந்த 300 படங்களையும் முழுமையாக பார்த்து தேர்வு செய்தார். இன்று அதற்கான  அர்ப்பணிப்பும் நேர அவகாசமும் மிகக் குறைவு. அரைமணி நேரம் பார்வையிட்டு அதனடிப்படையில் முடிவெடுப்பார்கள். அதே போல 5 நிமிடம் மட்டும் பார்வையிடும்  நடுவர்களும் உள்ளனர். படத்தின் முதல் 5 நிமிடத்தில் படத்தின் தன்மை புலப்பட்டுவிடும். 5நிமிட க்ரியேட்டிவிட்டி உங்கள் படங்களை தெரிவு செய்ய தூண்டி விடும்."

நாங்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் கலைத்துவம் கமர்ஷியல் என்பதைப்பற்றி இங்கு பொருட்படுத்துவதில்லை என்பது இந்த பதில்களில் புரிந்தது. ஒரு படைப்பின்  க்ரியேட்டிவிட்டி மட்டுமே கருத்திற் கொள்ளப்படுகின்றது. நம் அடிப்படை பிரச்சினையே நமக்கு  க்ரியேட்டிவிட்டி  என்றால் என்ன?  எது  க்ரியேட்டிவ் என்பதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. நடிகன் விதவிதமான தோற்றங்களில் வருவதை, கதையை துண்டு துண்டாக உடைத்து படமாக்குவதை, பல கதைக்களங்களில் பயணிப்பதை உணர்வுகளை மிகைப்படுத்துவதை வேகமான காட்சிகள் நகர்வதை  க்ரியேட்டிவிட்டி  என்று நம்புகின்றோம். க்ரியேட்டிவிட்டி என்பதை தீர்மானிக்கும் மையம் Artistic visionஇல் தங்கியுள்ளது. ஒருவரது சமுகத்தின் மீதான அவதானிப்பும் கவனிப்பும்  Artistic visionஎன்பதை தீர்மானிக்கின்றது. நம் வாழ்வியல் அணுகுமுறை சரியாக இருப்பின் சினிமாவையும் சரியாக அணுக முடியும். இந்த அணுகுமுறையே நமது க்ரியேட்டிவினை செம்மைப்படுத்துகின்றது.

அடிப்படையில் பார்த்தால், நம் சமுக சூழல், நம் வாழ்வியல் ரசனைக்கான களங்களை  உருவாக்குவதில்லை. நமது பார்வை தனித்துவமானதல்ல. சுற்றியுள்ள மனிதர்களை, நம் நகரத்தை நாம் அவதானிக்கும் தன்மை குறைவு. சினிமா எடுக்க உலக படங்களை பார்ப்பதும் புத்தகங்களை படிப்பதும் பயணம் செய்வதும் திரைப் பிரபலங்களின் தொடர்புகளை பேணுவதும் போதும் என்ற safe zone மனநிலையிலும் மெத்தன அனுகுமுறையுள்ளும்  உலவுகின்றோம்.

இரவல்களுக்கும் இலவசங்களுக்கும் வாழ பழக்கப்படுத்திக் கொள்கின்றோம். எண்பதுகளில் வைக்கப்பட்ட காமிராக் கோணங்களே இன்றும் வைக்கப்படுகின்றன. ஏன் வைக்கின்றோம் என்ற புரிதல் இருந்தால் அதைப்பற்றிய மாற்றுச் சிந்தை வளர்ச்சியடைந்து பரிசோதனை முயற்சிகள் பெருகும். அது நமக்கு தேவையில்லை என்று நம்மை வசதிப்படுத்திக் கொள்வதிலேயே வாழ்வதை  மறந்துவிடுகின்றோம். நம் வாழ்க்கையின் கூறுகள் சினிமாவில் பிரதிபலிக்கின்றன. வாழ்வியல் மாறும் வரை சினிமாவில் எந்த மாற்றங்களையும் காண முடியாது. நம் படங்களின் க்ரியேட்டிவிட்டி  நம் சமுக மாற்றத்திலும் கலைப்புரட்சியிலும் தங்கியுள்ளது. சமுகம் மாற சினிமாவின் சிந்தனை தளமும் மாறும்.

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery