A Millionaire's first love...

நம் வாழ்வில் எத்தனையோ பேர் நம்முடன் வாழ்கிறார்கள்  
அனைவரையும் நாம் நேசிப்பதில்லை . அம்மா,அப்பா,சகோதர்கள்,நண்பர்கள்,வாழ்க்கை துணை இப்படி நம் நேசிப்பு வட்டம் மிகச் சிறியதே ...
இந்த சிறிய நேசிப்பு வட்டத்தில் வாழ்பவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு வைத்துள்ளோம் .
அவர்கள் அருகிருப்பை அதிகம் விரும்புகிறோம் .அவர்களுடன் வாழ் நாட்களை அனுபவிக்க எண்ணுகிறோம்.
பிடித்தவர்களுடன் பிடித்த வாழ்க்கை எவ்வளவு அருமையானது ?
ஆனால் நம் நேசத்துக்குரியவர் நம்மை விட்டு பிரியப்போகிறார் அதுவும் நிரந்தரமாக உலகை விட்டு போகப்போகிறார் என்று அறிகையில் எப்படி இருக்கும் ?
அவரின் பிரிவு வலி என்றால், பிரிவு நிகழப்போகிறது என்பதை அறிந்து அவருடன் வாழும் வாழ்க்கை அதீத வலியை தரும்.
அந்த வலியோடு கடக்கும் நாட்கள் மிக கொடுமை .
அந்த வலிதரும் உறவு நம் காதலாக இருந்தால் ...
அந்த காதலின் கதைதான் A  millionaire's first love
ஜே க்யூன் (Kang Jae-Kyung) மிகப் பெரிய கோடீஸ்வரன் .சிறுவயதில் பெற்றோரை இழந்து பணத்தை மட்டும் ஒரே துணையாக கொண்டதால் முரட்டுத்தனம் கொண்டவனாகவும் திமிர் பிடித்தவனாகவும் இருகின்றான் .
பள்ளிப்படிப்பை முடிக்கமால் பொறுப்பின்றி  திரியும் ஜே தனது 18 வது பிறந்த நாளை நண்பர்களோடு கொண்டாடி விட்டு திரும்புகையில் ஒரு பெண்ணை சந்திக்கிறான் .
தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியாக இருக்ககூடும் என்று அவளுக்கு ஜே பணம் கொடுக்க அதை அலட்சியப்படுத்தி விட்டு செல்கிறாள் .
பெற்றோர் இல்லாத ஜேயின் கார்டியன் அவர்களுடைய குடும்ப வக்கீல் .
உயிலின்படி அவனுடைய பள்ளி மேற்படிப்பை கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து சித்தி பெற்றால் தான்  சொத்துகள் அவனுக்கு சேரும் இல்லாவிட்டால் மொத்த சொத்தின் ஒரு சதவிகிதம் மட்டுமே கிடைக்கும்  என்று  உயிலை  பற்றி கூறுகிறார் வக்கீல்.
முதலில் மறுத்து சண்டையிடும் ஜே அதன் பிறகு சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்காக அந்த கிராமத்துக்கு புறப்படுகின்றான் .

அந்த கிராமத்து பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஜேயின் தாத்தாவின் நெருங்கிய நண்பர்.அந்த ஊரில் ஜேயை எல்லாருக்கும் நன்கு தெரிந்திருகிறது .அதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறான்.
அவனுக்கு இன்னொரு ஆச்சர்யமும் ஏற்படுகிறது  .முன்னர் சந்தித்த பெண்ணை மீண்டும் இதே கிராமத்தில் சந்திக்கிறான்  . 
அந்த பெண்ணின் பெயர் சொய்  யூ வான்  (Choi Eun whan).அவளும் அதே பள்ளியில் தான் படிக்கிறாள்.பணக்காரனான ஜேக்கு அந்த எளிய பள்ளியும் கிராம வாழ்க்கையும் பிடிக்கவில்லை . பள்ளியில் இருந்து வெளியேற நினைக்கிறான் .தானாக விலகினால் சொத்துக்கள் கிடைக்காது போய் விடும் என்பதால் அவர்களாக வெளியேற்ற வேண்டும் என்று நினைத்து திமிராக நடந்து கொள்கிறான் .படிக்காது சுற்றி திரிகின்றான் .சக மாணவனை அடித்து காயப்படுத்துகின்றான் ,பள்ளி செயற்பாடுகளில் கலந்து கொள்ள மறுக்கிறான் ,தன் நண்பர்களை அழைத்து வருகிறான் .
இப்படி பல முயற்சிகள் செய்தாலும் எல்லாமே தோல்வியில் முடிகின்றன .
இவன் குணமறிந்த தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து விலக்க மறுக்கிறார் 
ஒரு மழை நேர மாலையில் ஒரு சிறுவனும் சிறுமியும் குடையுடன் செல்வதை பார்கிறான் ஜே .அவன் மனதில் ஏதோ தோன்ற அவர்களை பின் தொடர்கிறான் .
அவர்கள் இருவரும் ஒரு வீட்டை தாண்டி செல்ல அங்கேயே நிலைத்து விடுகிறான் .அந்த வீடு அவனுள் பழைய நினைவுகளை தோற்றுவிகின்றது .அது ஜே தன் குடும்பத்துடன் வாழ்ந்த வீடு .உள்ளே சென்று பார்க்கின்றான் .பெற்றோருடன் வாழ்ந்த அழகிய நினைவுகள் ஞாபகம் வர அடுத்த நிமிடமே அவர்கள் அவனை விட்டு சென்ற அந்த இறுதிக் கணம் நினைவுக்கு வருகிறது .உடைந்து அழுகின்றான்  .பொழியும் மழையோடு அவன் கண்ணீரும் கலக்கிறது .

அடுத்த நாள் அவனைக்கான யூ வருகிறாள் 
காய்ச்சலோடு இருக்கும் ஜே அவளைக் கண்டதும் அம்மா என்று சொல்ல எத்தனித்து மயங்கி விழுகின்றான் .ஜேயை யூ கவனித்து கொள்கிறாள்.
காய்ச்சல் குணமான பின்னர் பள்ளிக்கு வரும் ஜே காலில் அடிபட்டதாக கூறி பாடசாலை நாடகத்தில் பங்கேற்க மறுக்கிறான் 
அவன் பொய் சொல்கிறான் என்று அறிந்து அவன் மீது கோபப்பட அவளுக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது .வலியால் துடிக்கும் யூவை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகின்றான்  .
யூ இதய பலஹீனம் உடையவள் இன்னும் கொஞ்ச நாட்களில் அவள் இறந்து விடுவாள் என்ற செய்தி அப்போதுதான் ஜேவுக்கு தெரிகின்றது .
அவளை குணப்படுத்த ஆசைப்படும் ஜே தன் வக்கீலிடம் சென்று பணம் கேட்கிறான் .
அவர் படிப்பை முடித்தால் தான் சொத்துக்கள் கிடைக்கும் என்னால் பணம் தர முடியாது என்று மறுத்து விடுகிறார் .
அவள் இறந்து போகப் போகிறாள் என்பதால் ஜே யூவுடன் நட்பாக பழகுகிறான். யூவின் நாடகத்தில் பங்கேற்கிறான் ,அவளுடன் இணைந்து தோட்ட வேலைகளில் ஈடுபடுகிறான் .
மரணத்தை எதிர்நோக்கும் யூ மகிழ்ச்சியாக எந்த கவலையும் இல்லாமல் வாழ்வதைப் பார்த்து ஆச்சர்யப்படுகின்றான் .
ஆனால் அவளுடைய வலியை தான் அனுபவிப்பதை உணர்கின்றான் .

 ஒரு கட்டத்தில் தன்னை பார்க்க வரவேண்டாம் என்று யூவை திட்டி விட்டு ஓடோடிசென்று தனிமையில் அழும் ஜே ...யூவை காப்பாற்ற முடியவில்லை என்ற இயலாமையில் தான் நடந்து கொண்டதை எண்ணி வருந்துகிறான் .

அடுத்தநாள் 
நாடக அரங்கில் ஒரு சிறுவனும் சிறுமியும் பேசிகொண்டிருகிறார்கள் .பிரிவை சொல்லும் அந்த காட்சியில் இன்னும் 10 இரவுகளில் திரும்பி வருவதாக சத்தியம் செய்துவிட்டு அந்த சிறுமியிடம் விடை பெறுகிறான் சிறுவன்  .

அந்த காட்சியை பார்த்த ஜே அதிர்ச்சியடைந்து 'இந்த காட்சியை எழுதியது யார்?' என்று கேட்கிறான் .யூ எழுதியது என்று நண்பி சொல்ல வார்த்தைகளில் வெளிபடுத்த முடியாத உணர்வுகளோடு அந்த மழையில் யூ வை தேடிப் போகின்றான் .
அவனுடைய சிறுவயது நாட்கள் நிழலாட தன் சிறுவயது தோழியான யூவிற்கு 10 இரவுகளில் திரும்பி வருவதாக சத்தியம் செய்துவிட்டு ஊரைவிட்டு சென்றது நினைவுக்கு வருகிறது .

மழையில் தனியே நின்றிருக்கும் யூவிடம்
 ''நான் திரும்பி வந்துவிட்டேன் ஆனால் தாமதமாக...
 10 இரவுகளில் வருவதாக சொன்னேன் தாமதமாகி விட்டது .உன்னிடம் விடைபெற்று சென்ற  அன்று தான் பெற்றோர் விபத்துக்குள்ளாகி இறந்து போனார்கள் .அந்த இழப்பு என் வாழ்வை மாற்றி விட்டது .அந்த ஞாபகங்களை அடியோடு அழித்துவிட்டேன் .உன்னையும் சேர்த்து .அதுதான் என்னுள் ஆழமான வலியை உண்டாக்கியிருகிறது .காலம் சென்றாலும் நான் திரும்பி வந்துவிட்டேன் ''
ஜே யின் வார்த்தைகள் யூவை அழவைக்க ''உன்னோடு பனிக்காலத்தில் ஒன்றாக இருக்கவேண்டும் .அந்த முதல்பனியை உன் அருகில் இருந்து நான் ரசிக்க வேண்டும் அது தான் என் நீண்ட கால ஆசை .அதற்காக தான் காத்திருக்கிறேன் ''என்கிறாள்
யூவின் குடைக்குள் தன்னை உட்புகுத்திகொள்ளும் ஜே ''உன்னை நான் காயப்படுத்தியிருகிறேன் இருந்தாலும் காதலிக்கிறேன் '' என்று கூறி யூவின் கண்ணீரை துடைத்துவிட்டு   முத்தமிடுகிறான்.
அன்று முதல் யூவுடன் வாழத் தொடங்குகிறான் ஜே .இருவரும் ஒரே வீட்டில் வசிக்கத்தொடங்குகிறார்கள் .அந்த வீட்டை யூவுக்காகவே மாற்றி அமைகிறான் ஜே .
பால்ய காலம் திரும்பி விட்டது போல இருவரும் உணர்கிறார்கள் .
சிரிப்பும் விளையாட்டுமாக நாட்கள் சந்தோசமாக கடக்கிறது .
ஆனாலும் ஜே ''அவளை சீக்கிரமாக என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் ;அவளுக்கு நான் googbye சொல்ல நேரம் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான் .

பள்ளிமாணவர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது யூ ஜேயின் விரல்களை பிடித்துக் கொண்டு லேசாக அவன் தோள்களில் சாய்ந்தபடியே புகைப்படம் எடுத்துக் கொள்கிறாள் .

ஒருநாள் நெஞ்சுவலி ஏற்பட்டு துடிக்கும் போது ''எனக்கு பயமாக இருக்கிறது உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் காதலும் என் இதயத்தை அடைகிறது'' என்கிறாள் .
யூவின் பிறந்தநாளை கொண்டாடுகிறான் ஜே ''இன்று என் பிறந்த நாள் இல்லை என்று அவள் மறுக்க ''உன் பிறந்த நாள் வரை என்னால் காத்திருக்க முடியாது ''என்று புன்னகைக்கிறான் 
பிறந்த நாள் பரிசாக ஒரு பாட்டில் நிறைய மருந்துகளை கொடுத்து ''இது உன்னை குணப்படுத்தும்'' என்று கூறுகிறான் .மாத்திரைகளை உடைத்துபார்கிறாள் .அதற்குள் கவிதைகள் எழுதப்பட்டிருப்பதை பார்த்து அவன் அன்பில் நெகிழ்ந்து போய் உடைந்து அழுகிறாள் .

பள்ளி நாடகத்தில் நண்பனிடம் கதாநாயகன் வேடத்தை கேட்டுப் பெற்று யூவுக்காக நடிக்கிறான் .வசனங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வசனத்தையும் இதயத்திலிருந்து பேசுகிறான் .அவன் வார்த்தைகளில் வெளிப்பட்ட காதலை மௌனத்தோடும் வலியோடும் எதிர்கொள்கிறாள் யூ .

பனிக்காலம் வருகிறது ஜேயின் தோள்களில் சாய்ந்து அந்த நிமிடத்தை அனுபவிக்கிறாள் .உனக்கு நான் எதுவுமே செய்யவில்லையே என்று வருந்துகிறான் ஜே ''நீ என் சந்தோசத்தை எனக்கு தந்திருக்கிறாய் என்று கூறுகிறாள் 
தன் தோள்களில் சாய்ந்து உறங்கும் யூவை நினைத்து கண்ணீர் விடும் ஜே அந்த பனிக்காலத்தின் முதல் பனியை அவளோடு உணர்கிறான் .

யூ பள்ளியில் சித்தி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது .எல்லாரும் அமர்ந்திருக்க அவள் இடத்தில் பூங்கொத்து வைக்கப்பட்டிருகிறது .எல்லாரும் கை தட்ட ஜே மட்டும் அதை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்கிறான் .
சில நாட்களுக்கு பிறகு நிறைய ஜன்னல்களுடன் யூவின் கனவு வீட்டை நிர்மானிக்கின்றான் ஜே .
யூவுடனான இறந்த கால நினைவுகளுடன் கடக்கிறது ஜேயின் எதிர்காலம் .

கதை என்று பார்த்தால் நமக்கு பழக்கமான கதைதான்
தம்பிக்கு எந்த ஊரு ,நினைத்தாலே இனிக்கும் ,ஒய் படங்களில் பார்த்த கதை . காதலை காட்சிபடுத்திய விதம் தான் அழகு .
இறுதி நிமிடங்களோடு போராடும் காதலியின் வலியை சுமக்கும் காதலின் நாட்களை அழகாக காட்சிபடுத்தி இருகிறார்கள் .மனதை வருடும் இசையோடு காதலின் மென்மையான கணங்களை அழகாக பதிவு செய்திருகின்றார்கள் .வசனங்கள் கவிதைகள் .
ஒரு காதல் கவிதை புத்தகத்தின் பக்கத்திருப்பலை போல காட்சிகள் நகரும் விதம் அழகு ."Nothing is more important than the true love of your heart." 
உணர்வதே காதல் என்பதைப் போல படமும் உணர்வற்கு மட்டுமே ..

Comments

Popular posts from this blog

Dyketactics

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....